PUBLISHED ON : டிச 09, 2019

ஊரக வளர்ச்சித் துறை மூலம், கிராமங்களில் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அரசால் 2014இல், 'முன்மாதிரி கிராமத் திட்டம்' (Saansad Adarsh Gram Yojana) தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடர்பாக, பிரதமர் மோடி 18 அம்ச வழிகாட்டுதல்களை வெளியிட்டார். இவற்றை நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட நிர்வாகம், கிராமப் பஞ்சாயத்து ஆகியோர் இணைந்து கடைப்பிடிக்க வேண்டும்.
18 அம்ச வழிகாட்டுதல்கள்
* காந்தியின் சுயராஜ்யக் கொள்கையைக் கடைப்பிடித்தல்
* ஏழை, நலிவடைந்தோருக்குப் பயன் கிடைத்தல்
* கிராமத்தைத் தேர்வுசெய்ய ஒரு மாத கால அவகாசம்
* சமவெளியில் 3,000- - 5,000, பழங்குடியினர் பகுதியில் 1,000 - -3,000 மக்கள்தொகை உள்ள கிராமத்தைத் தேர்வு செய்தல்
* பஞ்சாயத்துத் தலைவர், மாவட்ட ஆட்சியருடன் ஆலோசித்து திட்ட அறிக்கை தயாரித்தல்
* நாடாளுமன்றத் தொகுதி நிதி செலவினம் தொடர்பாக, மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை குழுவுடன் ஆலோசனை நடத்துதல்
* மக்கள் பங்களிப்புடன் வெளிப்படையாகச் செயற்படுதல்
* கிராமப் பஞ்சாயத்துகள், மக்கள் ஆதரவுடன் அமலாக்கம்
* உள்ளூர், சமூக கலாசாரங்களுக்கு மதிப்பளித்தல்
* தன்னார்வ, ஆராய்ச்சி நிறுவனங்களின் பங்களிப்பைப் பெறுதல்
* சுகாதாரம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், அடிப்படை வசதிகள், நல்லாளுகைத் திட்டங்களை வகுத்தல்
* சாலை, குடிநீர், சுகாதார அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்க உத்தி வகுத்தல்
* நவீன தொலைத்தொடர்பு, தொழில்நுட்ப வசதிகள், வேளாண் தொழில்நுட்ப வாய்ப்புகளை உருவாக்குதல்
* தனியார், தன்னார்வ அமைப்புகள், கூட்டுறவுத் துறைகளின் ஒத்துழைப்பைப் பெறுதல்
* திட்டச் செயற்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்தல்
* திட்டத்தின் நன்மைகள் பற்றிப் பிரசாரம் செய்தல்
* திட்ட அமலாக்கத்துக்குப் பிந்தைய தேவைகளை ஆராய்தல்
* திட்ட முடிவில் மதிப்பீட்டு அறிக்கை தயாரித்தல்
