PUBLISHED ON : டிச 09, 2019

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு என்ன தகுதிகள் வேண்டும்?
தகுதிகள்:
பேரூராட்சி, நகராட்சி, மேயர், வார்டு உறுப்பினர் என, எந்தப் பதவிக்குப் போட்டியிடுகிறாரோ அந்த உள்ளாட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலில் போட்டியிடுபவரது பெயர், ஏதாவது ஒரு வார்டில் இடம்பெற்றிருக்க வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளன்று, வேட்பாளருக்கு 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
தகுதியின்மை:
குற்றவியல் நீதிமன்றத்தால் ஆறு மாதத்திற்கு மேல் தண்டனை பெற்றவராக இருக்கக் கூடாது.
தண்டனைக் காலம், தண்டனை முடிவடைந்த நாளிலிருந்து ஆறு ஆண்டு காலத்திற்குத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தகுதியற்றவர். மேலும், தேர்தல் குற்றச் செயலுக்காகவோ (வாக்குக்கு பணம் கொடுத்தல் உள்ளிட்டவை) தண்டனை பெற்றிருப்பின், தண்டனை பெற்ற நாளிலிருந்து ஐந்தாண்டு காலத்திற்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவராகக் கருதப்படுவார்.
1955ஆம் ஆண்டு குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (Protection of Civil Rights Act) தண்டனை பெற்றவராக இருத்தல் கூடாது. அவ்வாறு பெற்றிருப்பின், தண்டனை பெற்ற நாளிலிருந்து ஆறு ஆண்டு காலத்திற்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
வேட்பாளர், காதுகேளாததோடு வாய்பேசாமலோ, மனநலம் குன்றியவராகவோ, தொழுநோயாளியாகவோ இருக்கக் கூடாது.
வேட்புமனு செய்பவர், கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாதவராகவோ, அதற்காக நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவராகவோ இருக்கக் கூடாது.
வேட்பாளர் சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சியின் வழக்கறிஞராகவோ, எதிர்வழக்கறிஞராகவோ இருக்கக் கூடாது.
வேட்பாளர் ஓர் அரசு பணியாளராகவோ, அலுவலராகவோ இருக்கக் கூடாது.
சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சிக்குச் சேரவேண்டிய தொகைகைளைச் செலுத்தாமல் (வரிகள்) இருக்கக் கூடாது.
இதற்கு முன் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு அதற்கான செலவுக் கணக்கைக் கொடுக்காமல் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்க ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தால், மூன்றாண்டுகளுக்கு இத்தேர்தலில் போட்டியிட முடியாது.
வேட்பாளர் சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் (மக்களவை, மாநிலங்களவை) உறுப்பினராகவோ இருக்கக் கூடாது.
தகவல்: tn.gov.in
