PUBLISHED ON : பிப் 25, 2019

உலகத்தில் மழையை நம்பி விவசாயம் செய்யும் நாடுகளில் முதலிடத்தை நம் நாடு பெற்றுள்ளது. இங்கே 86 மில்லியன் ஹெக்டேர் விளைநிலங்கள் மழையை நம்பியே இருக்கின்றன. குறிப்பாக, இங்கே இருக்கிற 60 சதவீத விவசாயிகள், தங்கள் வாழ்க்கையை நடத்த வான்மழையை மட்டுமே நம்பியிருக்கிறார்கள்.
குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் விவசாயத்துக்கான ஆதாரம், மழை மட்டுமே.
மழை விவசாயம்
மழையை மட்டுமே நம்பி இருக்கும் விவசாயம் என்பதை எப்படிக் கணக்கிடுகிறார்கள்? எவ்வளவு தூரம் பாசன வசதி இருக்கிறது என்பதில் இருந்து கணக்கிடுகிறார்கள். உதாரணமாக, ஒரு நிலப்பரப்பில் 40 சதவீதத்துக்கும் குறைவான பகுதி பாசன வசதி பெறுகிறது என்றால், அந்த நிலம் மழையை மட்டுமே நம்பியிருக்கிறது என்று அர்த்தம்.
“நேஷனல் ரெயின்ஃபெட் ஏரியா அத்தாரிட்டி”யினுடைய (National Rainfed Area Authority) கணக்கெடுப்பின்படி இந்தியாவில் இருக்கிற 499 மாவட்டங்கள் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வருகின்றன.
88 சதவீத தானியங்கள், 89 சதவீத சிறுதானியங்கள்,73 சதவீத பஞ்சு, 69 சதவீத எண்ணெய் விதைகள், 40 சதவீத அரிசி ஆகியவை, மழையை நம்பிய விவசாயத்தின் மூலமே கிடைக்கிறது. இந்தியாவின் 64 சதவீத கால்நடை வளர்ப்பும் (ஆடுவளர்ப்பு 78%, செம்மறி ஆடு வளர்ப்பு 74%) இதன் அடிப்படையில் இயங்குகிறது.
ஒவ்வொரு விவசாயப் பகுதியிலும் நிலவும் காலநிலை, நிலப்பரப்பின் தன்மை, மண்ணின் வளம் போன்றவைதான் விளைச்சலை நிர்ணயிக்கின்றன.
அதுமட்டுமல்ல; மிகவும் வறண்ட காலநிலை அல்லது மிகவும் ஈரமான காலநிலை போன்றவை விளைச்சலை அதிகம் பாதிக்கும் காரணிகள்.
இதன் காரணமாக, மழையை மட்டும் நம்பிச் செய்யப்படும் ஒட்டுமொத்த விவசாயமும் இப்படிப்பட்ட விளைச்சலை வழங்கும் என்று தீர்மானமாகக் கூறமுடியவில்லை. இந்தியாவில் பெரும்பான்மையான விவசாய உற்பத்தியின் ஆதாரம், வானம் பார்த்த பூமிதான்.
- சு.கவிதா
