PUBLISHED ON : மே 02, 2016

உயிர் வாழக் காற்று மிகவும் அவசியம். (''அடடே... எங்களுக்கே தெரியுமே...'') உடல் செயல்பாட்டிற்குத் தேவையான ஆக்சிஜனை உள்ளிழுத்து உடல் உறுப்புகள் இயங்க உதவுவது சுவாசம். ஒரு முறை நாம் சுவாசிக்கும்போது குறைந்தபட்சம் அரை லிட்டர் காற்று உள்ளே இழுக்கிறோம்.
உடலின் ஒவ்வொரு செல்லும் இயங்குவதற்கு ஆற்றல் தேவை. இந்த ஆற்றலை காற்றிலிருந்து நாம் எடுத்துக் கொள்கிற ஆக்சிஜன் தருகிறது. காற்றிலிருந்து சுவாசிக்கிற ஆக்சிஜன் மூச்சுக் குழாய்களின் வழியாக நுரையீரலை அடைகிறது. அங்குள்ள எண்ணற்ற நுண்ணறைகளை ஆக்சிஜன் நிரப்புகிறது. அந்த நுண்ணறைகளின் சுவர்களில் ரத்தக் குழாய்கள் பின்னிக் கிடக்கின்றன.
ரத்தக் குழாய்களில் உள்ள ரத்தத்தில் மிதந்து கொண்டிருக்கும் ரத்த சிவப்பு அணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்சிஜனை கிரகித்துக்கொள்கிறது.
உடலில் நடக்கும் வளர்சிதை மாற்றச் செயல்களின்போது ஏற்படும் கழிவுகளை அப்புறப்படுத்தும் வேலையையும் சுவாச மண்டலமே செய்கிறது. இது தவிர, மூச்சுக் காற்றின் வழியாக உடலுக்கு உள்ளே புக முயலும் நோய்க் கிருமிகளை வடிகட்டித் தடுத்து நிறுத்துவது, பேசும்போது ஒலி எழுப்பத் தேவையான காற்றைத் தருவது போன்ற வேலைகளையும் சுவாச மண்டலம் கவனித்துக்கொள்கிறது.
ஒரு நிமிடத்தில் சராசரியாக 12 முதல் 14 தடவை மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுகிறோம். ஒவ்வொருவரது உடல் அமைப்பையும், பொறுத்து இந்த அளவு மாறுபடும்.
நம்முடைய நுரையீரல்களை நாம் நல்ல முறையில் கவனித்துக் கொண்டால் அவை நம்முடைய ஆரோக்கியத்தை சிறந்த முறையில் கவனித்துக்கொள்ளும்.
