PUBLISHED ON : மே 09, 2016

இந்தக் காலத்தில் கார் வாங்குவதைத் தனிமனித வளர்ச்சியின் அடையாளமாகப் பார்க்கிறோம். உலகில் உற்பத்தியாகும் வாகனங்களில் 74 சதவிகிதம் கார்களாகத்தான் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள்தான்.
பெட்ரோலிய எரிபொருட்களைக் கொண்டு ஓடும் கார்களுக்கு முன்னர், நீராவி என்ஜின் கார்களும், மின்சார பாட்டரி கார்களும்தான் பிரபலமாக இருந்தன. கார்ல் பென்ஸ், 1886ஆம் ஆண்டில் டீசல் காரை அறிமுகப்படுத்தினார். இருந்தாலும் அடுத்த 22 ஆண்டுவரை பெட்ரோலியக் கார்களால் சந்தையைப் பிடிக்க முடியவில்லை. அமெரிக்காவில் விற்பனையான 10 கார்களில் 1 கார் மட்டுமே பெட்ரோல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஓடியது.
அந்தக் காலத்து கார் கம்பனிகள், கார்களைப் பட்டறைகளில்தான் வடிவமைத்தன. தொழிலாளர்கள் மிகவும் நுணுக்கமாக வேலை செய்து, ஒவ்வொரு காராக உற்பத்தி செய்தார்கள். இதற்கு அதிக நேரம் செலவானதால், கார்களின் விலையும் மிகவும் அதிகமாக இருந்தது. சாமானிய மக்களால் கார் வாங்குவதை நினைத்துகூடப் பார்க்க முடியவில்லை.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி ஃபோர்டு (Henry Ford) 1896ஆம் ஆண்டில், பெட்ரோல் என்ஜின் பொருத்திய கார் ஒன்றை உருவாக்கினார். இதன் வடிவமைப்பு மிகவும் எளிமையாக இருந்தது. அமெரிக்காவில் சாமானியர்களும் வாங்கக்கூடிய முறையில் இந்தக் காரைத் தயாரித்து விற்க விரும்பினார், ஃபோர்டு. மிச்சிகனில் 1903ஆம் ஆண்டில் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தைத் தொடங்கினார்.
இந்த நிறுவனம், அசெம்பிளி லைன் (Assembly line) என்ற புதிய தயாரிப்பு முறையை அறிமுகப்படுத்தியது. இந்த முறையில் பிரத்தியேகமான பொறிகளை வடிவமைத்து, முதலில் கார்களின் உதிரிப் பாகங்களைத் தனித்தனியாகத் தயாரிப்பார்கள். பிறகு உதிரிப் பாகங்களை வரிசைகளில் அனுப்பி, கார்களை வரிசையாகக் கட்டுவார்கள். இந்த முறையைப் பயன்படுத்தி, ஃபோர்டு கம்ெபனியால், குறைந்த நேரத்தில் நிறைய கார்களைத் தயாரிக்க முடிந்தது. அதனால் காரின் விலை குறைந்து, நிறைய கார்கள் விற்பனை ஆயின.
இதே நேரத்தில் வங்கிகளும் கார் வாங்க, கடன் கொடுக்க முன்வந்ததால், அமெரிக்கர்கள் கார்களை வாங்க, ஆர்வம் காட்டினார்கள். தங்களின் இருப்பிடத்தில் இருந்து தொலைதூரம் பயணித்து, பிற நகரங்களுக்கு வேலைக்குப் போகத் தொடங்கினார்கள். அதன் மூலம் தனிநபர் பொருளாதாரமும் நாட்டின் பொருளாதாரமும் மேம்பட்டது.
குறைந்த விலையில் பெட்ரோல் கார்கள் விற்பனைக்கு வந்ததால் அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது நல்ல விஷயம்தான். ஆனால் அதன் பிறகு பெட்ரோலிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் கார் உற்பத்தி மட்டுமே வளர்ந்தது. பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் கார்களின் ஆராய்ச்சியும், வளர்ச்சியும் ஆரம்ப நிலையிலேயே நின்றுவிட்டன. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் அதே நிலை தொடர்கிறது.
