PUBLISHED ON : செப் 26, 2016

பகத் சிங் பிறந்த தினம் செப்டம்பர் 27
இந்திய விடுதலைக்காகப் புரட்சி வழியில் போராடிய வீரர், பகத் சிங். இவர், பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்த லாயல்பூர் மாவட்டத்தில், 'பங்கா' எனும் கிராமத்தில் 1907ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை சர்தார் கிசன் சிங்; தாயார் வித்தியாவதி. பகத் சிங்கின் குடும்பத்தில், அவரது தாத்தா, தந்தையார், சிற்றப்பா, மாமாக்கள் எனப் பலரும், பல்வேறு அமைப்புகளில் இணைந்து, விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றவர்கள். அதனால் சிறு வயது முதலே, இந்திய விடுதலை உணர்வு உடையவராக பகத் சிங் வளர்ந்தார்.
லாகூர் தேசியக் கல்லூரியில் படித்த போது, உலக அரசியல் வரலாற்றைத் தீவிரமாகக் கற்றுத் தேர்ந்தார். கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸின் கம்யூனிசக் கொள்கையால் கவரப்பட்டு, தீவிர கம்யூனிசவாதி ஆனார். இளைஞர்களையும், விவசாயிகளையும் ஒருங்கிணைத்து, 1926ஆம் ஆண்டில் 'நவ் ஜவான் பாரத்' என்ற சுதந்திரப் போராட்ட இயக்கத்தைத் தொடங்கினார். பல்வேறு புரட்சிகர சுதந்திரப் போராட்ட இயக்கங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். 'இந்துஸ்தான் குடியரசு அமைப்பு' என்ற இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரானார்.
காங்கிரஸ் தலைவரான லாலா லஜ்பதிராய், 1928ல் சைமன் குழுவின் வருகையை எதிர்த்துப் பேரணி நடத்தியபோது, ஆங்கிலேயர்களால் தாக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட உடல்நலிவால் சிறிது காலத்தில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்துக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, பகத் சிங்கும் அவரது சகாக்களும், சாண்டர்ஸ் எனும் காவல் அதிகாரியை சுட்டுக்கொன்றனர்.
தொடர்ச்சியாக, தனது தோழர்களுடன் இணைந்து, டில்லி மத்திய சட்டமன்ற வளாகத்தில் குண்டு வீசினார். தப்பிக்க வாய்ப்பிருந்தும், 'புரட்சி ஓங்குக!' என்று முழக்கமிட்டுக் கைதானார். ஆங்கிலேய அரசு, இந்தத் தொடர் தாக்குதல் சம்பவங்களுக்காக, பகத்சிங்கையும், அவரது சகாக்களான ராஜகுரு மற்றும் சுகதேவையும், 1931ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தூக்கிலிட்டது. 'பகத் சிங்கின் தேசப் பற்றை நான் மதிக்கிறேன்; ஆனால் அவரது வழிமுறையை நான் ஏற்கவில்லை', என்றார் காந்தி.
தூக்கு தண்டனையை நிறைவேற்ற காவலர்கள் அழைத்தபோது, 'தி ரெவல்யூஷ்னரி லெனின்' என்ற புத்தகத்தை வேக வேகமாகப் படித்துக் கொண்டிருந்த பகத், 'ஒரு அத்தியாயத்தை முடிக்க விட மாட்டீர்களா?” என்று கேட்டாராம்.
