PUBLISHED ON : ஜன 08, 2018
கென்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தற்காப்புக்கலை பயிற்சி ஒன்று பாலியல் துன்புறுத்தல்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துள்ளது. ஐ.எம். பவர் (IMpower) என்று அழைக்கப்படும் தற்காப்புப் பயிற்சி, ஆண், பெண் இருபால் சிறுவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
'இல்லை என்பதன் பொருள் இல்லை' மட்டுமே (no means no) எனும் தாரக மந்திரத்தை முன்னெடுக்கும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம், இந்தத் தற்காப்புக்கலையை வடிவமைத்துள்ளது. இதன்படி, உடலைப் பாதுகாத்துக்கொள்வது மட்டுமல்லாமல், யாரேனும் அத்துமீறினால் அச்சமயத்தில் எவ்வளவு சத்தமாக கத்த முடியுமோ அவ்வளவு சத்தமாகக் கத்துவதும் முக்கியம் என்று சொல்லித்தருகிறது. அப்படி கத்தும்போது, நம்மைத் துன்புறுத்துபவர் அதிர்ச்சிக்குள்ளாவதோடு, அருகில் இருப்பவருக்கும் நமது அபாயம் புரியும் என்பதால் உதவி கிடைப்பது எளிது.
நான் தைரியமாக இருக்கிறேன், என்னை என்னால் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது போன்ற தன்னம்பிக்கை தரும் வாசகங்களை மந்திரம்போல உருவேற்றிக்கொள்வதன் மூலம், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதும் இப்பயிற்சியின் ஒரு அங்கமாகும். வாரத்திற்கு ஒரு முறை 2 மணி நேரம் எனும் வீதத்தில் ஆறு வாரங்களுக்கு இந்தப் பயிற்சி நீள்கிறது. பத்து முதல் பத்தொன்பது வயது வரையிலான பெண் குழந்தைகள் இப்பயிற்சியில் மிக அதிகமாகச் சேர்ந்து பயன்பெறுகிறார்கள். முதல் இரு ஆண்டுகளுக்குள்ளாகவே 12 ஆயிரம் பேர் வரை பயிற்சி பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. இதற்கான கட்டணம் மிகக் குறைவு.
பெண்களுக்கு மட்டுமல்லாமல், இந்தப் பயிற்சி ஆண் குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது. ஆண்கள் பாலின வேறுபாடுகள் சார்ந்த மனத்தடைகளை தாண்டவும், சக தோழியர் பாதிக்கப்படும்போது உதவவும், இந்தப் பயிற்சிகள் உதவுகின்றன.
நைரோபியில் லீ பைவா (Lee Paiva) என்பவரால் முன்னெடுக்கப்பட்ட 'நோ மீன்ஸ் நோ' அமைப்பு உலகெங்கும் பாலியல் வன்முறைகளுக்கெதிரான விழிப்புணர்வை பரவலாக்க முயற்சிகள் செய்துவருகிறது. இதுவரை 3 லட்சம் சிறுவர், சிறுமியர் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளதாக அவ்வமைப்பு தெரிவிக்கிறது.
