PUBLISHED ON : ஜன 28, 2019

மனிதர்களின் சிறப்பே அவர்களின் சிந்திக்கும் திறன்தான். இத்திறனையும் செயற்கை நுண்ணறிவாக்கி இயந்திரங்களைச் சிந்திக்க வைத்தது மனிதனின் சாதனை. பாடல்களுக்கு இசை, கவிதை எழுதுவது, ரெசிப்பிகளை உருவாக்குவதில் தொடங்கி தானியங்கி கார்கள் வரை செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) பங்கு நம்மை வியக்க வைக்கிறது.
இன்னும் மிகச்சில ஆண்டுகளில் இந்த உலகத்தை ஆளப்போவது செயற்கை நுண்ணறிவுதான். இதனால்தான், அதன் முக்கியத்துவத்தைப் பற்றி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் சூர்ய பிரபா. சென்னையைச் சேர்ந்த இவர், தன்னுடைய யூகோட் (Youcode) ஸ்டார்ட்அப் நிறுவனம் மூலம், தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோடிங் பயிற்சியளித்து வருகிறார். இம்முறையில் மாணவர்கள் தாங்களே கோடிங் எழுதி ரோபோக்களை இயக்கலாம். சூர்ய பிரபா தனது கோடிங் பயிற்றுவிப்புப் பயணம் பற்றி நம்மிடம் பேசினார்.
“எனது சொந்த ஊர் தேனி மாவட்டம் கம்பம். படித்தது மைக்ரோ பயலாஜி. எனக்குச் சிறுவயதிலிருந்தே டெக்னிக்கல் விஷயங்களில் அதிக ஆர்வம்; குறிப்பாக, செயற்கை நுண்ணறிவுத் துறையில், செயற்கை நுண்ணறிவுத்துறை வளர்ச்சியைப் பார்த்து எனக்குப் பிரமிப்பாக இருந்தாலும், கிராமப்புற மாணவர்களுக்கு இதுபற்றிய விழிப்புணர்வு இல்லையே என்று வருத்தம் இருந்தது.
என் கணவர் கார்த்திக் மெக்கட்ரானிக்ஸ் துறையைச் சேர்ந்தவர். அவரிடம் என் கவலையைக் கூறியபோது, “நாமே மாணவர்களிடம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே” என்றார். இதற்காகத் தொடங்கியதுதான், 'YOUCODE' நிறுவனம். இதன்வழியே, மாவட்டக் கல்வி அதிகாரிகளை அணுகிப் பேசினேன். அவர்களின் ஒத்துழைப்போடு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோடிங் பற்றி விழிப்புணர்வு முகாம்களை நடத்தத் தொடங்கினேன். தற்போது, மதுரை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகரைச் சேர்ந்த மாணவர்களின் மீது கவனம் செலுத்தி வருகிறோம்.
எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், கோடிங் மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆகியவற்றை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதே எங்கள் நோக்கம். ஆறாம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கோடிங்கை அறிமுகப்படுத்தி வருகிறோம். பள்ளிகளில் நடக்கும் முகாம்களின்போது, மாணவர்களின் கற்றல் திறன் பிரமிக்க வைத்தது. மாணவர்களே எளிமையான கோடிங்குகளை எழுதி, ரோபோட்டுகளை இயக்கும்போது, அவர்கள் பெரும் மகிழ்ச்சியடைகின்றனர்.
மாணவர்கள் நேரடியாக ரோபோக்களை தொட்டுப் பார்த்து, கோடிங் எழுதி அதனை இயக்கும்போது அவர்களின் ஈடுபாடு அதிகமாகிறது. இதன்மூலம் எதிர்காலத்தில், ரோபோடிக்ஸ் துறையைத் தேர்வு செய்யும் விருப்பம் அவர்களுக்குள் விதைக்கப்படுகிறது. மாணவர்களுடன் ஆசிரியர்களும் கோடிங்குகளை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். ஒருநாள் விழிப்புணர்வு வகுப்புடன் கூடுதல் வகுப்புகளை எடுக்க மாணவர்கள் வற்புறுத்துகின்றனர். அவர்களுக்காகச் சில பள்ளிகளில் கூடுதல் வகுப்புகளையும் நடத்துகிறோம்” என்கிறார் சூர்ய பிரபா.
நகர்ப்புற மாணவர்களைவிட கல்வி வாய்ப்பும், பொருளாதார வசதியும் குறைந்த கிராமப்புற மாணவர்களுக்கு கணினி கோடிங் குறித்த அறிவை ஏற்படுத்துவதே லட்சியமாக இயங்கி வருகிறார் சூர்ய பிரபா.
''தங்களுடைய பிள்ளைகள் புத்திசாலியாக வளரவேண்டும் என்பதுதான், அனைத்து பெற்றோரின் விருப்பமும்கூட. ஆனால், கிராமங்களில் இந்த அறிவு குறைவு. எனவே, கிராமங்களுக்குச் சென்று தண்டோரா போட்டு பெற்றோர்களுக்கு கோடிங் அறிமுக நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். இதுவரை 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறோம். இதன் அடுத்தகட்டமாக, பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவை ஒரு பாடமாக்க முயற்சி எடுத்து வருகிறோம்.” என்றார் சூர்ய பிரபா.
