தையல் தொழிலாளியின் மகன்: இன்று நம்பர் 1 சாதனையாளர்!
தையல் தொழிலாளியின் மகன்: இன்று நம்பர் 1 சாதனையாளர்!
PUBLISHED ON : ஜன 28, 2019

எந்த அலட்டலும் இல்லாமல், “ நினைவானது கனவு” என்று ஷதாப் ஹுசைன் இட்ட டிவிட்டர் பதிவே, அவரது தன்னடக்கத்துக்குச் சான்று. அப்படி என்ன சாதித்துவிட்டார் அவர்; என்ன கனவு நினைவானது ஹுசைனுக்கு? ஆம், சி.ஏ. (Chartered accountant) தேர்வில், முதல் முயற்சியிலேயே, 74.63 சதவீத மதிப்பெண்கள் பெற்று, இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து சாதித்துள்ளார். 22 வயதான ஹுசைனின் சாதனையை ஹைலைட்டாக்குவது, அவரது தந்தை ஒரு தையல் தொழிலாளி என்பதே.
இராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதியைச் சேர்ந்த ஹுசைனின் தந்தை ரஃபீக், வெறும்
10ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். குடும்பப் பொருளாதாரச் சுமையை ஏற்க வேண்டியிருந்ததால், அவரால் படிப்பைத் தொடர முடியாமல் போனது. தையல் தொழிலாளியான அவரது தந்தை, குடும்பத்தைப் போராட்டத்துடன் நடத்தி வருகிறார். ஹுசைனின் தாயாரும், வறுமை காரணமாக சிறுவயதிலேயே பள்ளிப்படிப்பை கைவிட்டவர். ஆனால், “எங்களால் முடியாததை மகன் சாதித்துக் காட்டுவான் என்று ஆழமாக நம்பினோம். மகனின் படிப்புக்காக எத்தகைய கஷ்டத்தையும் தாங்கும் மனநிலையிலேயே இருந்தோம்” என்கின்றனர் பெற்றோர் இருவரும்.
“நான் நல்ல வேலைக்குப் போகவேண்டும் என்பதற்காகவே, இரவு பகலாகப் படித்தேன். என் பெற்றோர், வயதான காலத்தில் கஷ்டப்படக்கூடாது என்பதில் வைராக்கியத்துடன் இருந்தேன். சி.ஏ. என்பது எல்லோரும் கவனம் செலுத்தும் துறை அல்ல. காரணம், அதற்காக நீங்கள் வாழ்க்கை முழுவதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும். எனினும், எனக்கு சி.ஏ. மீது ஒருவித ஆர்வம் இருந்தது. படிப்பு பற்றி விசாரித்து அறிந்துவிட்டு, சி.ஏ.வுக்காக முயற்சிப்பது என்று முடிவு செய்துகொண்டேன். ” என்கிறார் ஹுசைன்.
“நான் கடின உழைப்பை நம்பினேன். அதன்படியே, சோஷியல் மீடியா, திருமண நிகழ்ச்சிகள் போன்ற விஷயங்களில் ஈடுபடுவதை முற்றாகத் தவிர்த்துவிட்டு, முழுக்கவனத்தையும் படிப்பிலேயே செலுத்தினேன். நான் 3 மணி நேரம் படித்தால் ஒரு அரை மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொள்வேன். தினமும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வேன். அது எனக்கு மன அழுத்தத்தில் இருந்து விடுதலை தந்தது
நாம் தினமும் என்ன செய்கிறோம், எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறோம் என்பதைக் கேள்வி கேட்டு சோதிப்பது அவசியம். அந்த சுயபரிசோதனைக்காக தினமும் சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டும். காரணம், நிறைய விஷயங்களைச் செய்தது போல் தோன்றும். ஆனால், ஒருகட்டத்தில் திரும்பிப்பார்த்தால், நம்முடைய இலக்கை அடைவதற்கான முயற்சிகளை குறைவாகவே செய்திருப்போம். எனவே, தினமும் நம் முன்னேற்றங்களை டிராக்கிங் செய்வது நல்லது.
நான் முதலில், தேர்வில் பாஸ் செய்வதற்குரிய கேள்விகளை அடையாளம் கண்டு, அதை முறையாகப் படித்தேன். அந்தக் கட்டத்தை தாண்டிய பிறகு, கூடுதல் மதிப்பெண்கள் எடுப்பதற்குரிய கேள்விகளுக்காகத் தயாரானேன். இதுவே, நான் முதல் மதிப்பெண் பெற்றதற்குக் காரணம். மாணவர்கள் இதைப் பின்பற்றினால், ஜெயித்துக் காட்டலாம்” என்கிறார் ஷதாப் ஹுசைன்.
