
சுத்தம் சோறு போடும் என்பார்கள். நாம் தூய்மையாக இருந்தால் மட்டும் போதாது, நம்மை சுற்றி உள்ள பகுதிகளையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கியத்தில் இருந்து, தங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டும் முயற்சியில் பல பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 105 வயது மூதாட்டி குன்வர் பாய். இவர் தன்னுடைய ஆடுகளை விற்று கழிப்பறை கட்டினார். இதனை அறிந்த மத்திய அரசு 'சுவச் பாரத் அபியான்' விருதை அவருக்கு அறிவித்தது. இந்தச் சூழலில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியர் சிலர் தங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டும் வரை, தங்க நகை அணிய மாட்டோம் என்று கழற்றி கொடுத்துள்ளனர்.
பீகார் புக்ஸார் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்றில் 18 மாணவியர் படிக்கின்றனர். இவர்கள் ஒருவர் வீட்டில் கூட கழிப்பறை வசதி இல்லை. கழிப்பறை வசதி இல்லாதது அவமானமாக உள்ளதாக மாணவியர் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களில் ஆறு மாணவியர் தாங்கள் அணிந்திருந்த தங்க நகைகளை அதிகாரிகளிடம் கொடுத்து, 'எங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டும் வரை நகைகள் அணிய மாட்டோம்' என்று கூறியுள்ளனர். மேலும் போதிய வசதி இருந்தும் தங்கள் பெற்றோர் கழிப்பறை கட்ட மறுப்பதாகவும் அந்த மாணவியர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சமூகத்தின் மாற்றத்தில் பெண்களுக்கு பெரும் பங்கு உண்டு என்பதையே இந்த இரண்டு சம்பவங்களும் நிரூபிக்கின்றன.

