PUBLISHED ON : அக் 13, 2016

தெற்காசிய நாடுகளின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு சார்க் (SAARC- South Asia Association for Reginal Co-Operation).
பாகிஸ்தானில் வரும் நவம்பர் 9, 10ஆம் தேதிகளில் 19 ஆவது சார்க் மாநாடு நடப்பதாக இருந்தது.
இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல், பேரிடர் நிர்வாக மையத்தை நிறுவுவது, நாடுகளுக்கிடையே ரயில் பாதை சாலை போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்து, விவாதிக்கப்பட இருந்தது.
ஏன் தள்ளி வைப்பு
* இந்த அமைப்பில் எட்டு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஆரம்பத்தில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட 7 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தன.
* 2007ல்தான் புதிய உறுப்பு நாடாக ஆப்கானிஸ்தான் இணைந்தது.
* அண்டை நாடுகளின் வளர்ச்சி, மதம், கலாச்சாரம், பாரம்பரியம் மதிக்கப்பட வேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கம்.
* நாடுகளுக்கிடையே அமைதி காத்தல், ஆக்கிரமிப்பு செய்யாதிருத்தல் இந்த அமைப்பில் உள்ள நாடுகள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய கொள்கை.
ஆனால் பாகிஸ்தான் இந்தக் கொள்கையை பின்பற்றவில்லை. காஷ்மீரின் சில பகுதி பாகிஸ்தான் வசம் உள்ளது. அங்கு தீவிரவாதிகள் முகாம் அமைத்து அடிக்கடி இந்தியா மீது தாக்குதல் நடத்துகிறார்கள். சமீபத்தில் காஷ்மீர் உரி(Uri) பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் நம் ராணுவத்தினர் 19 பேர் உயிரிழக்க நேர்ந்தது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது.
உள் விவகாரங்களில் தலையீடு
தீவிரவாதிகளின் தாக்குதலைக் கண்டித்து, இந்தியா அதில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்தது. தங்கள் நாட்டு உள் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவதாக வங்க தேசம் இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக கூறியது. பூடான் பயங்கர வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநாட்டிற்கு மறுப்பு சொல்லியது. ஆப்கானிஸ்தான், இலங்கை அரசுகளும் வர மறுத்து விட்டதால் பாகிஸ்தான் மாநாட்டை நடத்த முடியாமல் ஒத்தி வைத்து விட்டது.
சார்க் அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளில், ஏதாவது ஒரு நாடு, மாநாட்டை புறக்கணித்தாலும் கூட, சார்க் மாநாடு தானாகவே ரத்து செய்யப்பட்டு விடும் அல்லது ஒத்தி வைக்கப்படும்.
எத்தனை ஆண்டுகள்
ஆரம்பத்தில் ஆண்டுக்கு ஒரு முறை சார்க் மாநாடு நடத்தப்பட்டது. பின்னர் இரண்டாண்டுகளானது. தற்போது மூன்றாண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடைசியாக நேபாளத்தில் 1014ல் காத்மாண்டுவில் மாநாடு நடந்தது. தற்போதைய தலைமைப் பொறுப்பில் நேபாள நாடு உள்ளது. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் தலைமைப் பொறுப்பு மாறும்.
எப்போது உருவானது?
* சார்க் அமைப்பு முதன் முதலாக 1985 ல் ஏற்படுத்தப்பட்டது. வங்கதேசம் டாக்காவில் முதல் மாநாடு நடந்தது.
* மாநாட்டின் பார்வையாளர்களாக ஆஸ்திரேலியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், ஈரான், ஜப்பான், மியான்மர், மொரிஷியஸ், தென்கொரியா, அமெரிக்கா நாடுகள் உள்ளன.
* தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளையும், இந்த நாடுகள் நடத்தி நட்புறவை பாராட்டுகின்றன.

