PUBLISHED ON : டிச 23, 2019

பத்து லட்சம் ஆண்டுகளாக பூமியில் ஏற்பட்டு வரும் பல மாற்றங்களுக்கிடையில், அவற்றைச் சமாளித்து வாழ்ந்துவரும் உயிரினம்தான் கடல் ஆமை. உலகின் பல நாடுகளில் கடல் ஆமைகளை வணிகத்திற்காகப் பயன்படுத்துகின்றனர். பருவநிலை மாற்றம், கண்டங்கள் நகர்தல் என, எத்தனையோ மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து வந்த கடல் ஆமைகள், மக்களின் சுயநலத்தால் அழிவைச் சந்தித்து வருகின்றன.
கடல் ஆமையின் அனைத்து வகைகளும் அச்சுறுத்தலைச் சந்திக்கும் விலங்குகளாக சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு (International Union for Conservation of Nature) பட்டியலிட்டுள்ளது. கடல் ஆமைகள் எப்படியெல்லாம் அழிக்கப்படுகின்றன என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்.
1. வணிகப் பயன்பாட்டிற்காக
கடல் ஆமைகள் அதன் தோலுக்காகவும், ஓட்டிற்காகவும் பெருமளவு அழிக்கப்படுகின்றன. குறிப்பாக, 'ஹாக்ஸ்பில்' (Hawksbill sea turtle) என்ற இனம், நகைகள் மற்றும் அணிமணிகள் தயாரிப்புக்காக பெருமளவு அழிக்கப்படுகின்றன. குஜராத் மற்றும் லட்சத்தீவுப் பகுதிகளில் கிடைக்கும் கடல் ஆமை இனம், அதன் எண்ணெய்க்காக வேட்டையாடப்படுகிறது.
கடல் ஆமையின் முட்டையிலிருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய், அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கிறது. இதன் காரணமாக சட்டவிரோதமாக கடல் ஆமைகள் விற்பனையும் உலகில் அதிக அளவில் நடக்கிறது.
2. உணவுத்தேவை!
பச்சைநிறக் கடல் ஆமைகள் இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன. அதேபோல, அனைத்துக் கடல் ஆமைகளின் முட்டைகளையும் உண்ணும் போக்கு உலக அளவில் அதிகமாகக் காணப்படுகிறது.
3. பிற விலங்குகளால் ஆபத்து!
நாய் போன்ற விலங்குகளால் கடல் ஆமைகள் அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன. அதுமட்டுமன்றி, நகரமயமாக்கல் மற்றும் கடற்கரை விரிவாக்கம் போன்றவையும் கடல் ஆமைகள் அழிவதற்குக் காரணமாக இருக்கின்றன.
தாதுக்கள் போன்ற இயற்கை வளங்களை எடுப்பதற்காக கடற்பகுதிகளில் மணல் சுரங்கங்கள் தோண்டப்படுகின்றன. இதனால், கடல் ஆமைகளின் வாழ்விடங்கள் பாதிக்கப்படுகின்றன.
4. மீன்பிடி வலை பாதிப்பு!
மீன் பிடிப்பவர்கள் 'கில் நெட்ஸ்' எனப்படும் மீன்பிடி வலையைப் பயன்படுத்தி மீனைப் பிடிக்கும்பொழுது, அந்த வலையில் தவறுதலாக கடல் ஆமைகள் மாட்டிக்கொண்டு விடுகின்றன.
நுரையீரல் மூலமாகக் காற்றைச் சுவாசிக்கும் இயல்புகொண்ட கடல் ஆமைகள், வலையில் மாட்டிக்கொள்ளும்போது தண்ணீரின் மேற்பரப்பில் நீந்த முடியாமல் தண்ணீருக்குள் மூழ்கி விடுகின்றன. இதன் காரணமாக சுவாசிப்பது தடைப்பட்டு இறக்க நேரிடுகிறது.
- காரா
