
பாடப் பகுதியில் 'கலிங்கத்துப் பரணி' என்று பெயர் கேட்டிருப்பீர்கள். இதில் பரணி என்றால் என்ன? வெற்றி பெற்ற தலைவனின் வீரத்தை, புகழ்ந்து பாடுவதுதான் பரணி. கலிங்க நாட்டை வென்ற முதல் குலோத்துங்க சோழன் புகழைப் பாடும் நூலுக்கு 'கலிங்கத்துப் பரணி' என்று பெயர்.
'ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி'
போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனின் வெற்றியைப் பாடுவதே பரணி என்று 'இலக்கண விளக்கம்' நூல் கூறுகிறது. அப்படியானால் ஆயிரம் யானையைக் கொன்று விட்டால் அவன் வீரன், பாடுவதற்குத் தகுதி உடையவன் என்று நினைத்து விடக் கூடாது. போர்க்களம் தவிர பிற இடத்தில் யானையைக் கொல்பவனுக்கு பரணி பாடுவது இல்லை.
கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, காடு பாடியது என பரணிக்கு இலக்கணமாய் பத்து உறுப்புகள் உண்டு.
கலிங்கத்துப் பரணிதான் நமக்குக் கிடைத்த முதல் பரணி நூல். இது தவிர, முதல் ராஜேந்திர சோழனைப் பாடிய 'கொப்பத்துப் பரணி', வீரராசேந்திர சோழனின் வீரம் போற்றும் 'கூடல் சங்கமத்துப் பரணி' ஆகிய இரு நூல்களும் இருந்தன. ஆனால் அவை காப்பாற்றி வைக்கப்படவில்லை.
பிற்காலத்தில் கடவுளைப் போற்றும் பரணியும் எழுதப்பட்டிருக்கிறது. ஒட்டக் கூத்தர் எழுதிய 'தக்கயாக பரணி', தத்துவராய சுவாமிகள் எழுதிய 'அஞ்ஞவதை (அறியாமை) பரணி','திருச்செந்தூர்ப் பரணி', 'இரணியன் வதைப் பரணி' ஆகியவை உதாரணங்கள்.
இதெல்லாவற்றையும் விட புழுப் பூச்சிகளைத் தின்று வாழ்கிற தாவரம் ஒன்றிற்கு பரணிச் செடி என்று பெயர் இருக்கிறது.

