PUBLISHED ON : டிச 03, 2018

சுவாமி விவேகானந்தரின், சிகாகோ சொற்பொழிவின், 125வது ஆண்டு நிறைவையொட்டி, இளைஞர்களுக்கான குறும்பட போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
1893ஆம் ஆண்டு, அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த, உலக மதங்களுக்கான கருத்தரங்கில், இந்தியா சார்பில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றினார். அதில், 'அமரிக்க சகோதர சகோதரிகளே' என்று உரையைத் தொடங்கிய அவர், இந்தியாவின் ஆன்மீக, கலாசார மற்றும் அறிவாற்றல் குறித்துப் பேசி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். புகழ்பெற்ற அந்தப் பேச்சு, இந்தியர்கள் தம் வலிமையையும், பெருமையையும் உணர்வதற்கும், உலக சமூகங்கள் நம் இந்தியாவின் மீது மரியாதை கொள்வதற்கும் முக்கிய காரணமாய் அமைந்தது. இந்நிலையில், அந்த உரையின் 125வது ஆண்டின் நிறைவைக் கொண்டாடும் விதமாக, சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம், இளைஞர்களுக்கான குறும்பட போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், '1) எல்லையில்லா இளமைச் சக்தி 2) இன்றைய இந்தியாவிற்குத் தேவையான தேசபக்தி 3) பாரதப் பெண்களின் ஆன்ம பலம் 4) பாரதத்தின் பார்வையில் உலக சமாதானம் 5) எல்லா சிந்தனைகளையும் ஏற்றுக்கொள்; உனக்குரிய மார்க்கத்தில் ஞானம் பெறு 6) இயற்கையைப் போற்றுவதும் பாதுகாப்பதும் இறையம்சமே ஆகிய தலைப்புகளில், ஒன்றை அடிப்படையாகக் கொண்டோ அல்லது சிலவற்றை அடிப்படையாகக் கொண்டோ குறும்படங்கள் எடுக்க வேண்டும். போட்டிக்கு குறும்படம் அனுப்ப வேண்டிய கடைசி நாள், பிப்ரவரி 15, 2019. முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 60 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். 15 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா 10,000 ரூபாய் வழங்கப்படும்.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, https://events.chennaimath.org/vsfc19 என்ற தளத்தை பார்வையிடவும். தொடர்புக்கு: 6374213050
