PUBLISHED ON : டிச 12, 2016

பொம்மைகள், காலத்துக்கேற்ப வடிவத்தில் மாற்றம் பெறுகின்றன. ஜெனிசிஸ் (Genesis) என்ற ஐரோப்பாவைச் சேர்ந்த பொம்மை தயாரிப்பு நிறுவனம், 'ஸ்மார்ட் பொம்மை' விற்பனையை கடந்த ஆண்டு தொடங்கியது. குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், அந்த பொம்மை வடிவமைக்கப்பட்டுள்ளது. பொம்மையில், இணைய வசதி, புளூடூத், கேமரா வசதி உண்டு. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, அமோக விற்பனையானது. இந்நிலையில், ஸ்மார்ட் பொம்மைகள் மூலம், குழந்தைகள் உளவு பார்க்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குழந்தைகளின் கேள்விகள், பதில்கள் போன்றவை பொம்மை தயாரிப்பு நிறுவனத்தின் தகவல் சேமிப்பு சர்வரில் சேமிக்கப்படுவதாக, 'தி சென்டர் ஃபார் டிஜிட்டல் டெமாக்ரசி' (The Center for Digital Democracy) என்ற அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. பொம்மை தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொம்மைகள் மூலம் கண்காணிக்கப்படுவது குழந்தைகளுக்கு தெரிந்தால், அது அவர்களிடையே எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்தும் என்று, டிஜிட்டல் டெமாக்ரசி அமைப்பு தெரிவித்துள்ளது.
