PUBLISHED ON : மார் 11, 2019
தமிழர் வாழ்வின் தனிச்சிறப்பான அடையாளம், சங்க இலக்கியங்கள். இவை அகம், புறம் என்று இருபெரும் பிரிவுகளாக அமைந்தவை. அகம் இல்லற வாழ்வையும், புறம் வீரத்தையும் மையமாகக் கொண்டவை.
என்றாலும் இலக்கியங்களில் வீரமே முதன்மைப்படுத்தப்பட்டு இருந்தது. அக வாழ்வும்கூட வீரத்தையே நினைவூட்டி இயங்கியதுதான் உண்மை. வீரத்தைக் கைக்கொள்கிற எவரும், இல்லற வாழ்வில் ஈடுபடும் சூழலிலும் வீரத்தை மறக்காது இருந்தனர். பத்துப்பாட்டில் ஒன்று, நக்கீரர் இயற்றிய 'நெடுநல் வாடை'. இதில் தலைவன் பாசறை அமைத்துப் போர்த் தொழிலில் இருக்க, தலைவி வருந்துகிறாள். இதன் பின்னணியில் அமைந்தது இந்த இலக்கியம்.
இதில் இராணியின் அறைக்குள் போடப்பட்டுள்ள கட்டிலின் பெயர், 'பாண்டில்'. அரசி உறங்குவதற்கான இக்கட்டில் மிகுந்த அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்டது. இக் கட்டிலில் உயர்ந்த யானையின் தந்தங்கள் பொருத்தப்பட்டிருந்தன. இத்தந்தங்கள் யானையின் உடலிலிருந்து (40 ஆண்டுகளுக்குப் பின்) தானாக உதிர்ந்தவை.
கட்டிலின் கால்கள், வல்லமை மிக்க, தொழில்நுட்ப தச்சனால் செய்யப்பட்டது. இதில் ஒரு கால் குழந்தையை ஈன்ற தாயின் மார்பைப் போன்றும், அடுத்து உள்ளிப்பூண்டின் வடிவத்திலும் அமைக்கப்பட்டிருந்தது. முத்துமாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. கட்டிலின் மேற்பகுதி புலியின் உடலைப்போன்று செதுக்கப்பட்டிருந்தது. சிங்கம் வேட்டையாடும் காட்சி, மெத்தை விரிப்பில் சித்தரிக்கப்பட்டிருந்தது. அன்னங்களின் உடலில் தானாக உதிரும் இறகுகளைக்கொண்ட தலையணைகள் கட்டிலில் போடப்பட்டிருந்தன.
அன்றைய காலம் வீரநிலைக்காலம். வீரம்தான் வாழ்வினை வாழ நிர்ணயித்திருந்தது. ஆகவே, இல்லற வாழ்விலும், வீரத்தின் மாண்பு தெரிய, அவற்றுக்குரிய கூறுகளைக் கட்டிலில் உருவாக்கிய விதம் என்றும் வியப்பிற்குரியதே!
- முனைவர் க. அன்பழகன்
