PUBLISHED ON : நவ 11, 2024

தமிழ்ச் சொற்களுக்கிடையே புதிர்போட்டு விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய செயல். சொற்புதிர்கள் வழியாக மொழியை நாம் ஆழ்ந்து கற்றுக் கொள்ளலாம். நமக்குத் தெரிந்த மொழிப்பண்புகள் அப்புதிர்களின் வழியாக நினைவுக்கு வரும். நாள்முழுவதும் புதிரின் விடைகளை எண்ணிப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அது மேலும் மொழி ஆளுமையைக் கூட்டும்.
அதனால் மொழிப்புதிர் போடலாம். அதற்கான விடைகளைக் காண முயலுங்கள்.
இரண்டு சொற்களைச் சொல்லவேண்டும். அவற்றில் ஒன்று பெயர்ச்சொல்லாகவும் அடுத்து வருவது வினைச்சொல்லாகவும் இருக்கவேண்டும். முதற்சொல் பெயராகவும் இரண்டாம் சொல் வினையாகவும் இருக்கட்டும்.
அவ்வாறு வரும் வினைச்சொல்லானது கட்டாயமாக வல்லின உயிர்மெய் எழுத்தில் தொடங்கக்கூடாது. அதாவது 'க,ச,த,ப' வரிசை எழுத்துகளில் தொடங்கக்கூடாது. அவை தவிர்த்த பிற உயிர்மெய்யெழுத்துகளான மெல்லின, இடையின எழுத்துகளில் தொடங்கலாம். உயிரெழுத்தில் தொடங்கலாம்.
முதற்சொல்லான பெயர்ச்சொல்லுக்கு எவ்வகைக் கட்டுப்பாடுமில்லை. எந்த எழுத்தில் வேண்டுமானாலும் தொடங்கலாம்.எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள் :மழை ஓய்ந்தது (மழை பெய்தது போன்ற தொடர்கள் விடையாகாது. ஏனென்றால் இரண்டாம் சொல்லான பெய்தது என்பது வல்லின உயிர்மெய்யெழுத்தான 'பெ' என்ற எழுத்தில் தொடங்குகிறது.)
காற்று வீசுகிறது
பூனை உறங்குகிறது
வள்ளி நடிப்பாள்
இயற்கை வழங்கும்
இதனை அடிப்படையாகக் கொண்டு கீழ் உள்ள வார்த்தைகளைப் பூர்த்தி செய்யுங்கள்
அ) நிலவு ஒ__ர்கி__து
ஆ) புலி உ__மி__து
இ) மயில்__ __வும்
-மகுடேசுவரன்
விடைகள்:
அ. நிலவு ஒளிர்கிறது
ஆ. புலி உறுமியது
இ. மயில் அகவும்
இது போல் எண்ணற்ற தொடர்கள் வரும்