PUBLISHED ON : ஜன 06, 2020

பறவைகள் போல் மீன்களும் இடம் பெயரும். உணவைத் தேடியோ, இனப்பெருக்கத்திற்காகவோ, பருவநிலை மாற்றங்களாலோ பெரும்பாலும் மீன்கள் இடம் பெயர்ந்து செல்கின்றன. மீன்கள் வலசை போவதை ஆராய்ச்சியாளர்கள் எப்படிக் கண்டறிகிறார்கள்?
1) அல்ட்ராசோனிக் டெலிமெட்ரி (Ultrasonic Telemetry) முறை
மீன்கள் எவ்வாறு அதன் வழியைக் கண்டுபிடிக்கின்றன என்பதை இந்த டிரான்ஸ்மிட்டரின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், இது விலை உயர்ந்தது, வாழ்நாளும் மிகச் சில வாரங்களே. அது மட்டுமன்றி, இதன் அதிக எடை காரணமாக, பெரிய மீன்களுக்கு மட்டுமே இம்முறையைப் பயன்படுத்த முடியும்.
2) ஸ்டைரோஃபோம் கண்காணிப்பு (Styrofoam- tracking)
இது பழைய முறை. ஏரிகளில் வாழும் மீன்களைக் கண்காணிக்க இம்முறை சிறந்தது. கொக்கிகளை ஒரு மீனின் முதுகெலும்பு தசை வழியாக செருகி, நீண்ட நூலைக் கொண்டு ஒரு சிறிய மிதவையோடு இணைக்கப்படும். மேற்பரப்பில் மிதவையின் இயக்கம் மீனின் இயக்கத்தைக் காட்டிக் கொடுத்து விடும்.
3) பிடித்தல் - இடப்பெயர்வு - மீண்டும் கைப்பற்றுதல் (Capture - Displacement - Recapture)
இம்முறையே பெரும்பாலும் பயன்படுகிறது. அதாவது மீன்களைப் பிடித்து இன்னோர் இடத்தில் விட்டு திரும்ப அவை எவ்விடத்திற்கு வருகின்றன என்பதை வைத்து இடம்பெயரும் முறையைக் கண்டுபிடிப்பது. மீன்கள் எப்படி இடம்பெயர்கின்றன? இதைத் துல்லியமாகக் கூறமுடியாவிட்டாலும், மீன் ஆராய்ச்சியாளர்கள் பல காரணங்களைக் கூறுகின்றனர்.
1. காந்தப்புலம்
மீன்கள், தான் செல்லும் திசையை நிர்ணயிக்க, திசைகாட்டி போன்ற காந்த உணர்வை ஒரு வரைபடமாகப் பயன்படுத்துகின்றன. பூமியின் காந்தப்புலம் உலகெங்கிலும் வேறுபடுகிறது. மீன்கள் தங்கள் இருப்பிடங்களுக்குப் பொருந்தக்கூடிய வகையிலான காந்தப்புலம் உள்ள இடங்களுக்குப் பயணிக்கின்றன.
ஸ்டீல்ஹெட் மற்றும் சால்மன் மீன்கள் காந்தப்புலங்களை நம்பியிருப்பதால், இரும்பு மற்றும் எஃகுக்கு அருகில் இருப்பது அவற்றின் திசை உணர்வைப் பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மீன் வளர்ப்புக் கூடங்களை உருவாக்கப் பயன்படும் உலோகம், இத்தகைய புலப்பெயர்ச்சிக்குப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.
2. வாசனை
மீன்கள் இளம் வயதிலேயே தாம் வாழும் நதிகளின் வாசனையை நினைவு வைத்துக் கொள்கின்றன. நதிகளை விட்டு கடலுக்குச் சென்றாலும், மீண்டும் அவை இருந்த இடத்திற்கே வாசனையை வைத்துத் திரும்புகின்றன.
3. பார்வை
கடலில் வெகுதூரம் பார்ப்பதற்கான சாத்தியங்கள் குறைவு என்றாலும், குறைந்த தூரங்களைப் பார்த்து அடையாளம் கண்டுபிடிக்க முடியும். அலைகளால் ஒரு முறை தாவிய மீன்கள் அதே வழிகளை நினைவில் வைத்துக்கொண்டு அடுத்த முறை அவ்விடத்திற்குச் செல்கின்றன. அருகருகில் இருக்கும் குளங்களுக்கு தாவிச் செல்லும் மீன்களான பாத்திகோபியஸ் சோப்பரேட்டர் (Bathygobius soporator) வகை மீன்களை ஆராய்ச்சியாளர்கள் கவனித்துப் பார்த்தனர். 6 முறை வெவ்வேறு திசைகளில் தாவி, வேறு குளத்திற்குச் சென்று, மீண்டும் தங்கள் இடத்திற்கே திரும்பிய அம்மீன்கள் ஆச்சரியத்தைத் தந்தன.
அந்த மீனைப் பிடித்து புது இடத்தில் விட்டபோது, முதலில் தவறாகவும், அடுத்த சில நாட்களுக்குள் வழிகளைக் கண்டுபிடித்து சரியாகவும் தாவியிருக்கிறது என்றால் அதன் திறமையைப் பார்த்துக் கொள்ளுங்களேன்!
- செளமியா
