
''பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கவே நான் இமயமலை ஏறினேன்” என்கிறார் மலாவத் பூர்ணா. 13 வயதில் எவரெஸ்ட் மலைச்சிகரத்தைத் தொட்டார். குறைந்த வயதில் இமயமலை ஏறியதே இச்சிறுமி செய்த உலக சாதனை.
மலாவத் பூர்ணா, தெலங்கானா மாநிலம், நிசாமாபாத் மாவட்டத்திலுள்ள பகலா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை விவசாயக் கூலி. அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் இலவசக் கல்வி கற்றார். அந்தப் பள்ளி தான், பூர்ணாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
தெலங்கானா மாநிலத்தின் கல்வி மற்றும் சமூக நலத்துறைச் செயலர் பிரவீன்குமார், அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை முன்னேற்றினார். அரசுப் பள்ளிகளில் ஊட்டச்சத்துமிக்க உணவு, தரமான கல்வி, விளையாட்டு, சாகசங்களுக்கான பயிற்சிகள் என, எண்ணற்ற மாற்றங்களைக் கொண்டு வந்தார். “அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ/ மாணவியர் மீது அவர் காண்பித்த அக்கறைதான், பலருடைய வாழ்க்கையை மாற்றியது” என்கிறார் பூர்ணா.
பூர்ணாவின் பள்ளியில், விடுமுறைக் காலத்தில் மாணவ/மாணவியருக்கு மலையேற்றப் பயிற்சி நடைபெற்றது. அப்பயிற்சியை வழங்க, அத்துறையில் சாதனைகள் செய்த சேகர் பாபு நியமிக்கப்பட்டார். பூர்ணா மிகத் துணிச்சலுடன் அனைத்துப் பயிற்சியிலும் முன்னிலை பெற்றார். பெண்களின் படிப்பிற்கு முன்னுரிமை கொடுக்காத ஊரில், மகளின் கனவுகளுக்குத் துணையாக இருந்தனர் பூர்ணாவின் பெற்றோர்.
மலையேற்றம் கடினமாக இருந்தாலும், அதில் ஈடுபடவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார் பூர்ணா. பயிற்சியின்போது, தெலங்கானாவில் உள்ள பான்கிர் மலையில் முதலில் ஏறினார். முதன்முதலில் மலை ஏறும்போது கால் நடுக்கம், பயம், உயரத்தைப் பார்த்து திகைப்பு என, அனைத்தும் இருந்ததாம். ஆனால், மலைச்சிகரத்தை அடைந்ததும், அந்தப் பயம் மறைந்து, மகிழ்ச்சியாக உணர்ந்தாராம். பயிற்சியில் சிறப்பாகச் செயல்பட்ட பூர்ணாவின் கனவு, அதோடு முடியவில்லை. அதன்பின் தான் தொடங்கியது.
'ஆபரேஷன் எவரெஸ்ட்' திட்டத்துக்குப் பூர்ணாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. டார்ஜிலிங், லடாக் போன்ற இடங்களில், பனிமலை ஏறுவதற்கான கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டது. “13 வயதில் இமயமலை ஏறுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அவளிடம் ஏதோ ஒரு சக்தியும் மனஉறுதியும் இருப்பதை உணர்ந்தோம்,” என்கிறார் பயிற்சியாளர் சேகர் பாபு.
எவரெஸ்ட் மலையை கணினியில் பார்த்தபோது, பூர்ணா விளையாட்டுத்தனமாக “இதை ஒருநாளில் ஏறிவிடலாம்” என்றாராம். இந்த மனநிலை தான் பூர்ணாவின் பலம்.
எவரெஸ்ட் மலைப் பயணம் 52 நாட்கள் நடைபெற்றது. பல சோதனைகள். ஆனால், மனம் தளராமலும் திரும்பிவிடாமலும் பூர்ணா தன் பயணத்தைத் தொடர்ந்தார். வானிலை மாற்றம் ஏற்பட்டு, சூறைக்காற்று அடித்தது. ஆனால், ஒவ்வொரு பிரச்னையையும் பொறுமையோடு அணுகினார். வழியில் சிலர் இறந்து கிடப்பதைப் பார்த்து கொஞ்சம் பயம் ஏற்பட்டதும் உண்மை. ஏனெனில், இறந்தால் உடலை ஊருக்குத் திரும்ப அனுப்புவது இயலாத காரியம். எதிர்மறை எண்ணங்களைத் தள்ளிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தார். முடிவு அவர் நினைத்ததுபோல அமைந்தது. எவரெஸ்ட் உச்சியில் கால் பதித்து, புதிய சாதனையில் இடமும் பிடித்துவிட்டார்.
தன்னை இந்நிலைக்கு உயர்த்திய அரசு செயலர் பிரவீன்குமாரைப் போல ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்பதுதான் அவருடைய கனவு. இன்னும் நிறைய சிகரங்களைத் தொடுவதற்கு வாழ்த்துகள்.

