
மணற்குவியல், தரையோடு இறுகாமல் இருக்கும் பாறைகள் போன்றவை சரிவதைப் பார்த்திருப்போம். நில அடுக்குகள் இறுக்கமாக இல்லாத பகுதிகளில், நிலப்பரப்புகள் சரிவதும் உண்டு. இந்த நிகழ்வை நிலச்சரிவு (Land slide / Land Slip) என்று சொல்கிறோம்.
பல காரணங்களால் நிலச்சரிவு ஏற்படுகிறது. நாம் அடிக்கடி கேள்விப்படும் மலைப்பகுதி நிலச்சரிவுகள், பெரும்பாலும் மழைக் காலங்களில் நடக்கின்றன. மலைச் சரிவுகளின் நில அடுக்குகளில், இறுக்கம் குறைவாக இருக்கும். மழைக் காலங்களில் இந்த நிலப்பரப்பு ஈரத்தை உறிஞ்சும்போது, அதன் பொளபொளப்புத் தன்மை கூடி, நிலச்சரிவு ஏற்படுகிறது.
உலகின் மிகப் பெரிய நிலச்சரிவு, 1,500 வருடங்களுக்கு முன்னால், ஈரானில் (Iran) 'சயித்மறே' (Saidmarreh) என்ற இடத்தில் நடந்தது. இந்தச் சரிவினால் விழுந்த பாறைகளும், மணற்குவியல்களும் 70 சதுர கி.மீ., நிலப்பரப்பை 300 மீ., ஆழத்துக்குப் புதைத்திருக்கிறது. சென்னையின் ஐந்தில் ஒரு பகுதி பரப்பு மூடப்படுவதற்கு, இது நிகரானது. இது ஒரே ஒரு பூகம்ப நிகழ்வால் நடந்ததாகப் புவியியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

