PUBLISHED ON : ஏப் 11, 2016

நகைச்சுவை கதை எழுதிய பாதிரியார்(வீரமாமுனிவர்)
கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி.
இத்தாலியைத் தாயகமாகக் கொண்டவர். அங்கே காஸ்திகிலியோன் என்ற இடத்தில் (8.11.1680) பிறந்தவர். ஒரு பாதிரியாராக 1710 இல் கோவாவுக்கு வந்தார்.
கொஞ்சம் நகர்ந்து தமிழகத்துக்கும் வந்தார். தமிழ் கற்க ஆரம்பித்தார். கற்கக் கற்க அவருக்கு தமிழ் மீது பெரிய பற்று வந்துவிட்டது. தன் பெயரை தைரியநாதன் என்று வைத்துக் கொண்டார். இன்னும் தனித் தமிழ்ப் பெயராகத் தெரிய வேண்டும் என்பதற்காக, 'வீரமாமுனிவர்' என்று மாற்றிக்கொண்டார்.
தமிழுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் அவரை உந்தியது. 'சதுரகராதி' என்னும் பெயரில் தமிழ்ச் சொற்களுக்கான அகராதியை உருவாக்கினார். திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால் ஆகிய இரு பிரிவுகளை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். விளக்க உரையும் கொடுத்தார். தேம்பாவணி என்னும் செய்யுள் நூல் இவர் எழுதியதே. 'பரமார்த்த குருவின் கதை' என்ற பிரெஞ்சு நகைச்சுவை நூலை தமிழுக்குத் தந்தவரும் இவரே.
லத்தீன், தமிழ் அகராதியை உருவாக்கினார். தமிழ், -போர்ச்சுகீசிய அகராதியையும் எழுதினார். இது மட்டுமா? தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகியவற்றை பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்தார். திருக்குறளின் லத்தீன் மொழிபெயர்ப்பு, இவரது கையெழுத்துப் பிரதியாக பாரீஸ் தேசிய நூலகத்தில் உள்ளது.
இவர் எழுதிய நூல்கள் 35. தமிழ் தாய் மொழி அல்லாத ஒருவர், தமிழைக் கற்று, இத்தனை நூல்களை எழுதி இருப்பது ஆச்சரியத்துக்கும் மகிழ்ச்சிக்கும் இடம் கொடுப்பதுதானே!
