PUBLISHED ON : செப் 05, 2016

நான் ஒருபோதும் மறக்க முடியாத ஆசிரியர்கள் என்று ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது. நான் படித்த பள்ளியும் கல்லூரியும் அப்படிப்பட்டவை. பள்ளி செங்கல்பட்டில் இருக்கும் புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளி. கல்லூரி தாம்பரத்தில் இருக்கும் சென்னைக் கிறித்துவக் கல்லூரி. பள்ளியில் எனக்கு பல வருடங்கள் முன்னர் புகழ் பெற்ற திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் மாணவராக இருந்திருக்கிறார். எனக்குப் பின் வந்தவர்களில் நடிகர் நாசர் குறிப்பிடத்தக்க மாணவர். இப்படி கலைத் துறைக்கு வித்திடும் பள்ளியாக அது இருக்கக் காரணம் பள்ளியின் உதவி தலைமையாசிரியர் ஸ்ரீரங்கன். அவர் ஸ்ரீதரின் வகுப்புத் தோழர் சித்ராலயா கோபுவின் தமையன். அவரும் கே.வி.ஸ்ரீனிவாசனும்தான் என்னை பள்ளி நாட்களிலிருந்தே நாடகத்தில் ஈடுபடுத்தி அடுத்த 50 வருடங்களுக்கு நாடகத்தில் என்னை ஈடுபாட்டுடன் இருக்கச் செய்துவிட்டார்கள். கல்லூரியில் இந்த தொடர்ச்சி விட்டுப் போகாமல் தழைக்க வைத்தவர் தமிழாசிரியர் கலைமணி என்கிற கிருஷ்ணசாமி.
பத்திரிகைத் துறையை நோக்கி என்னை நகர்த்தியவர்கள் ஆசிரியர்கள் பழனிவேலுவும் ஜி.வேணுகோபாலும். காலை அசெம்ப்ளியில் அன்றைய செய்தித்தாட்களிலிருந்து முக்கிய செய்திகளை என்னைத் தேர்வு செய்து வாசிக்கச் செய்தார் பழனிவேலு. வகுப்பின் சார்பில் தடி தடியாக கையெழுத்துப் பத்திரிகைகள் தயாரிக்க வைத்தார் வேணுகோபால்.
இசையிலே ஆர்வத்தை ஏற்படுத்தியவர் வகுப்பு நேரத்துக்குப் பின்னர் மேற்கத்திய நாட்டுப்புற பாடல்களைக் கற்றுக் கொடுத்த ஆங்கில ஆசிரியர் தேவசியா. கவிதை எனக்கு வருமா வராதா என்று கவலைப்படாமல் வகுப்பு முடிந்ததும் யாப்பிலக்கணம் சொல்லிக் கொடுத்தார் தமிழாசிரியர் கண்ணப்பன். நான் யாரென்று எனக்கே என்னை உணர்த்தி வாழ்க்கைப் பாடம் சொல்லிக் கொடுத்தார் கல்லூரியில் ஆங்கில ஆசிரியர் ரஜானி.
இப்படிப் பல ஆசிரியர்கள் ஏட்டுப் பாடத்துக்கு அப்பால் சொல்லிக் கொடுத்தவைதான் இன்று நான் என்னவாக இருக்கிறேனோ அதுவாக என்னை ஆக்கி இருக்கின்றன.
- ஞாநி
