PUBLISHED ON : செப் 26, 2016

ஒரு பேச்சுக்குத்தான் 'வானமே எல்லை' என்கிறோம்! ஆனால் விஞ்ஞான வளர்ச்சி அதையும் தாண்டி விரிவான வளர்ச்சிகளை அடைந்துகொண்டிருக்கிறது. ஒரு புறம் வளர்ச்சிகள் அதிகரித்தபடி இருக்க, மறுபுறமோ இயற்கையைப் பாதுகாப்பது குறித்து நாம் கவனம் செலுத்தாமல் இருக்கிறோம். இயற்கை வளங்கள் அழிந்துகொண்டே வருகின்றன. புவி வெப்பமயமாதல் காரணமாக, பூமியில் உயிரினங்கள் வாழும் சூழலுக்கு அபாயம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே போகிறது. புவி வெப்பமடைதல் கட்டுப்படுத்தப்பட வேண்டும். தொழிற்சாலை, வாகனப்போக்குவரத்து, காடுகளை அழித்து குடியிருப்புகள் ஏற்படுத்துதல், போன்ற காரணங்களால் வளி மண்டலத்தில் கரியமில வாயுவின் (Carbon Di oxide) அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. பூமியின் சூழலைச் சீராக வைத்துக் கொள்வதன் மூலமே நாம் வாழும் சூழல் ஆரோக்கியமாக அமையும். இதற்கான தீர்வு காணும் முயற்சிகளில் ஒன்றுதான் 'புவிப் பொறியியல்' (Geo Engineering). சூரியனில் இருந்து வருகிற வெப்பக் கதிர்களின் அளவை குறைக்கவும், செயற்கை மேகங்கள் உருவாக்கி பூமியின் வானிலையை சீராக வைக்கவும் புவிப் பொறியியல் ஆய்வுகள் உதவும். இதன் மூலம் பூமியின் வெப்ப நிலையை பழைய நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
