
அக்டோபர் 4 - உலக விலங்குகள் தினம் (World animal day)
மனித இனம் தோன்றுவதற்கு முன் விலங்குகளே பூமியில் இருந்துள்ளன. மனித இனம் தோன்றி படிப்படியாக வளரத் தொடங்கியது. இதன் பிறகு காடுகளில் சுதந்திரமாகச் சுற்றி வந்த விலங்குகள், பறவை போன்ற உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படத் தொடங்கியது. சொல்லப்போனால் உலகில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே, ஒவ்வோர் இடத்தின் சூழலியல் மண்டலமும் இயங்குகிறது. விலங்குகள் மனிதனைப் பாதுகாத்து, வாழ்வியல் சூழலுக்கு முக்கிய காரணியாக விளங்குகின்றன. இயற்கையும் விலங்குகளும் ஒன்றோடொன்று இணைந்த சூழலில்தான், மனிதனும் தன் வாழ்க்கையைச் சிறப்பாக வழிநடத்த முடியும்.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த வன ஆர்வலர், பிரான்சிஸ் அசிசி (Francis of Assisi) என்பவரது நினைவு நாளைக் கொண்டாடும் வகையில், உலக வன விலங்குகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இறைத் தூதுவராகப் போற்றப்பட்ட அசிசி, விலங்குகள் மீது அன்புகொண்ட ஆர்வலராக விளங்கினார். அவற்றைக் காப்பதற்கான முயற்சிகளையும் செய்தார். இதன் காரணமாகவே அவரது நினைவு நாள், உலக விலங்குகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
முதன்முதலாக 1931ஆம் ஆண்டு, இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் விலங்குகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அதன் பின்னர், விலங்குகளைப் பாதுகாப்பது, அவற்றுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் இந்த தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
பூமியின் விலை மதிப்பற்ற செல்வமாக இருக்கும் விலங்குகளும் இயற்கையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. சில விலங்குகள் கடல், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களைத் தன் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளன. இன்றைய காலகட்டத்தில் நம்மால் விலங்குகளைக் காப்பாற்ற முடியவில்லை என்றாலும், தீமை செய்யாமல் இருந்தாலே போதும், விலங்குகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும்!

