PUBLISHED ON : அக் 13, 2016

ரயில்கள் உட்பட எல்லா வண்டிகளையும், ஓட்டவும், நிறுத்தவும், தரையின் உராய்வுத் தன்மை (Friction - ஃபிரிக் ஷன்) கட்டாயம் தேவை. தடுப்புக் கருவிகள் (Brake - பிரேக்) சக்கரத்தை அழுத்திப் பிடித்துத் தடுத்தாலும், வண்டியின் ஓட்டம் நிற்க தரையின் உராய்வு தானே காரணம்? இதே உராய்வுதான் வண்டிகள் ஒரு வேகத்திற்கு மேல் செல்ல இயலாததற்கும் காரணம். ஒரு வேளை உராய்வே இல்லை என்றால்?! மிதமான தள்ளு சக்தி மட்டும் இருந்தால் போதுமே! வண்டிகள், குறிப்பாக ரயில்கள், வெகுதூரம் அதிவேகமாக செல்ல முடியும் இல்லையா?
'மெக்லெவ்' (Maglev) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ரயில்கள், 'மேக்னடிக் லெவிடேஷன்' (Magnetic Levitation) என்ற தொழில்நுட்பத்தில் இயங்குபவை. மின்காந்த சக்தி, இந்த ரயில்களைத் தண்டவாளங்
களிலிருந்து ஒரே சீராக அலேக்காக சில மி.மீ. உயரம் தூக்கிவிடுகின்றன! அத்தகைய நிலையில், வானில் பறக்கும் விமானம்போல, காற்றின் உராய்வை மட்டுமே இந்த ரயில்களும் எதிர்கொள்ளும்! பிறகென்ன? அதிவேகத்தில் பறக்கும். அதிகபட்ச வேகம், சீனாவில் ஷாங்காய் Maglev ரயில்; மணிக்கு 470 கி.மீ.! சென்னையில் இருந்து மதுரைக்கு இந்த ரயிலில் ஒரு மணி நேரத்தில் போய்விடலாம்!
இந்த ரயில்களை மிதக்க வைக்கவும், முன் தள்ளவும் மின்காந்தத்தையே பயன்படுத்துகிறார்கள். மின்னூட்டத்தால் தண்டவாளங்களில் காந்தத் தன்மையை ஏற்படுத்துவார்கள். அதனால் தண்டவாளத்தில் காந்தப் புலம் (Magnetic field - மேக்னடிக் ஃபீல்டு) ஏற்படும் அல்லவா? ரயிலின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும் காந்தங்களும் காந்தப் புலத்தை ஏற்படுத்தும். அதனால் காந்த விலக்கம் (Repulsion - ரிப்பல்ஷன்) ஏற்பட்டு, ஒரு சில மி.மீ உயரத்திற்கு தூக்கப்படும். காற்றில் மிதக்கும்போது ஒரு பலூனை சிறு விரல் கொண்டு லேசாய் தள்ளும்போது அது எவ்வளவு தூரம் செல்லும் என்பதை அறிவீர்கள். அது போல, இந்த இரயிலை முன் இழுப்பதற்கு சிறிய உந்துதல் கொடுத்தால் போதும்; அதிவேகத்தில் செல்லும்.
ரேவதி, அறிவியல் ஆர்வலர்.

