PUBLISHED ON : ஜூலை 08, 2019

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஒரு துளியேனும் மழை பெய்யாதா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம், மும்பையைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது கனமழை.
ஜூன் 28ஆம் தேதி பெய்யத் தொடங்கிய கனமழை, 10 நாட்களுக்கு மேல் ஆகியும் நிற்கவில்லை. அதிலும் குறிப்பாக ஜூன் மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய மழையில், மூன்றில் ஒரு பங்கு, ஒரு நாளில், அதுவும் 8.௩௦ மணிநேரம் கொட்டித் தீர்த்துவிட்டது.
வழக்கத்தைவிட இது ஐம்பது சதவீத கூடுதல் மழை என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள்.
கடந்த ஆண்டு, மகாராஷ்டிர மாநிலம், இதே நிலையில்தான் இருந்தது. ஆண்டின் தொடக்கத்தில் போதிய மழையின்றி, வறட்சியால் தவித்தது; அதன் பிறகு, கடும் மழையைச் சந்தித்தது. இதனால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு என்று திக்குமுக்காடிப் போனது.
கேரளத்திலும் இதேநிலைதான். இந்தியாவின் பல மாநிலங்களில், ஒரு மாதத்திற்குத் தேவையான மழைப்பொழிவு, சில நாட்களில் கொட்டித் தீர்ப்பதால், அதைச் சேமிக்கும் வாய்ப்பும் இல்லாமல் போய்விடுகிறது.
இந்தியா மட்டுமல்ல; உலகம் முழுவதும் இதே நிலைதான்.
மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கை, உலகம் முழுக்கவே குறைந்துவிட்டது. அதேசமயம், பெய்யும் மழையின் அளவு பத்து முதல் பதினைந்து சென்டிமீட்டர் வரை அதிகரித்துள்ளது.
அதாவது, மிகக் குறைந்த நேரத்தில் அதிக அளவில் மழை பொழியும் நிகழ்ச்சிகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.
அதிதீவிரமான மழைப்பொழிவுக்கு புவி வெப்பமயமாகி வருவது காரணமாக இருக்கலாம் என்று இந்தியத் தொழில்நுட்பக் கழகம் தனது ஆய்வு முடிவுகளில் கூறியுள்ளது.
