PUBLISHED ON : அக் 02, 2023

ஓர் ஊரில் ஒரு பெரியவர் வசித்துவந்தார்.
அவருக்கு நான்கு மகன்கள்.
அந்தப் பெரியவர் நிம்மதியாக இல்லை.
நான்கு பிள்ளைகளும் சோம்பேறியாக இருந்தது தான் காரணம்.
பெரியவருக்கோ வயதாகிவிட்டது. இவ்வளவு காலம் அவர் உழைத்து, அந்தப் பிள்ளைகளுக்குச் சோறு போட்டுவந்தார். தான் இறந்துவிட்டால் என்ன செய்வது என்று கவலைப்பட்டார் பெரியவர்.
ஒரு நாள் அவருக்கு மிகவும் உடம்புக்கு முடியாமல் இருந்தது. நான்கு பிள்ளைகளையும் அழைத்தார். “மகன்களே, நீங்கள் உழைத்தால் தான் உயிர்வாழ முடியும்” என்றார்.
“இவ்வளவு நாள் நாங்கள் வாழவில்லையா? இதேபோல் மீதம் இருக்கும் ஆயுளையும் சும்மா இருந்தே ஓட்டிவிடுவோம்” என்றான் ஒரு மகன்.
“சும்மா இருந்தால் காசு எப்படி வரும்?” என்று கேட்டார் பெரியவர்.
“யார் கண்டது? எங்களுக்கு ஏதேனும் புதையல்கூடக் கிடைக்கலாம்” என்றான் மகன்.
அப்போது தான் பெரியவருக்கு ஒன்று தோன்றியது.
“மகன்களே, உங்களிடம் நான் ஒரு விஷயத்தை மறைத்துவிட்டேன். நம்முடைய நிலத்தின் கீழே நான் நூறு தங்கக் காசுகளைப் புதைத்து வைத்திருக்கிறேன். அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னார். அன்றைக்கே இறந்தும் போனார்.
மகன்கள் உற்சாகமாக அந்த நிலத்தைத் தோண்டிப் பார்த்தார்கள்.
இங்கே, அங்கே என்று பல இடங்களிலும் தங்கள் நிலத்தைத் தோண்டி மண்ணைப் புரட்டிப் போட்டார்கள்.
தங்கக் காசுகள் கிடைக்கவில்லை.
அப்போது ஊர்ப் பெரியவர் அவர்களைப் பார்த்து, “நிலத்தை உழுதது போலத் தோண்டிவிட்டீர்கள். கவலை வேண்டாம், அதில் பயிர்களை விதையுங்கள்” என்றார்.
அப்படியே செய்தார்கள்.
சில மாதங்களில் அந்த நிலம் பயிர் விளைந்து குலுங்கியது.
பயிரை விற்றார்கள்.
காசு மட்டும் கிடைக்கவில்லை. உழைத்தால் தான் காசு கிடைக்கும் என்ற அறிவும் கிடைத்தது.

