PUBLISHED ON : அக் 21, 2019

மஞ்சள்
ஆங்கிலப் பெயர்: டர்மரிக் (Turmeric)
தாவரவியல் பெயர்: குர்குமா லாங்கா (Curcuma longa)
தாயகம்: தென்னிந்தியா
மண் அமைப்பு: களிமண், செம்மண்
இந்திய நறுமணப் பொருட்களில் மஞ்சள் மிகவும் அடிப்படையானது. இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மஞ்சள், உலகம் முழுவதும் பிரபலமான, நோய் நீக்கியாக அறியப்படுகிறது. இதனுடைய விசித்திரமான நறுமணம், வேறு எந்த நறுமணப் பொருளிலும் இல்லை.
வெப்பம், ஈரப்பதமிக்க இடங்களில் மஞ்சள் நன்றாக வளரும். மஞ்சள் பயிர் வளர்வதற்கு அதிகப்படியான மழை தேவை. இந்தியாவில் மொத்தம் 22 மாநிலங்களில் மஞ்சள் விளைகிறது. குர்குமின் என்ற பொருள் எல்லா வகை மஞ்சளிலும் இருக்கும். இது தான் கிருமிநாசினியாகச் செயற்படும்.
ஒவ்வொரு பகுதி மண்ணிலும் வெவ்வேறு அளவில் இந்தப் வேதிப்பொருள் இருக்கும். இந்தியாவிலேயே கேரளத்தில் மட்டும்தான் குர்குமின் அதிகப்படியாக 6.5 சதவீதம் உள்ளது. தமிழகத்தில் 3 முதல் 3.5 சதவீத அளவில் உள்ளது. தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் செம்மண் இருப்பதால், இந்த மாவட்டத்தில் விளையும் மஞ்சள் கிழங்கு, பளிச்சென்ற மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
இந்தியா, ஆப்பிரிக்காவில் மஞ்சள், சமையலுக்கான முக்கிய பொருளாக உள்ளது, மற்ற நாடுகளில் மஞ்சளை, நிறத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இந்தியா தவிர சீனா, பாகிஸ்தான், பெரு, தைவான் ஆகிய நாடுகளில் மஞ்சள் விளைகிறது. உலகின் 80 சதவீத மஞ்சள் இந்தியாவில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
