PUBLISHED ON : டிச 30, 2019
நாம் எல்லோரும் ஊபர் வண்டிகளைப் பயன்படுத்துகிறோம். 'ஊபர் ஈட்ஸ்' மூலம் உணவு வரவழைக்கிறோம். மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக ஊபர் வளர்ந்திருக்கிறது. அதன் வரவு அவ்வளவு அதிகம். இதை ஆங்கிலத்தில் 'யூனிகார்ன் நிறுவனங்கள்' என்றே பட்டியலிடுவார்கள்.
அதாவது, புதிதாக ஆரம்பிக்கப்பட்டு, மக்களின் பேராதரவோடு வளர்ந்து, நிறைய வாய்ப்புகளையும் உருவாக்கி, உலகையே திரும்பிப் பார்க்க வைப்பதையே 'யுனிகார்ன் நிறுவனங்கள்' என்பார்கள்.
அப்படிப்பட்டது ஊபர். அது, மே 2019இல் அமெரிக்கப் பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டது. அதன் ஒரு பங்கின் விலை 42 டாலராக இருந்தது. அதன் வளர்ச்சி கண்டு, பிரமிப்பே ஏற்பட்டது. எல்லோரும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய முண்டியடித்தனர்.
அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஊபர் பங்கின் விலை 45 டாலர்கள் வரை உயர்ந்தது.
தற்போது டிசம்பரில், ஊபர் பங்கின் விலை 30 டாலருக்கு விழுந்துள்ளது. கிட்டத்தட்ட 30 சதவீதம் சரிவு.
இதில் என்ன செய்தி இருக்கிறது?
இன்றைக்கு பலரும் புதிய நிறுவனங்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் புதிய முயற்சிகளையும் நோக்கி ஓடுகிறார்கள். ஆர்வம் காட்டுகிறார்கள். அது பெரிய அளவில் வளரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால், அடிப்படையில், ஐடியா நன்றாக இருக்கலாம். அவை லாபம் ஈட்டுகின்றனவா என்பதுதான் முக்கியம். அதைச் செய்யாதபோது, அத்தகைய நிறுவனங்கள் மீதும் அது சார்ந்த துறைகளின் மீதும் நம்பிக்கை போய்விடும்.
ஊபர் பங்கின் சரிவு என்பது எனக்குப் பெரிய மனவருத்தத்தைத் தந்தது.
தொழில்நுட்ப வளர்ச்சி என்பதை மிக முக்கியமாக கருதுபவன் நான். அதற்குக் கிடைக்கும் அங்கீகாரம் என்பது பொருளாதார ரீதியாக பிரதிபலிக்க வேண்டும்.
ஊபர் விஷயத்தில், பிரதிபலிக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அது நடைபெறவில்லை. இதனால், தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் அனைத்துமே லேசான பின்னடைவைச் சந்திக்கும். இத்தகைய புதிய முயற்சிகளில் முதலீடு செய்ய பலரும் தயங்குவார்கள்.
ஆனந்த் சீனிவாசன், பொருளாதார ஆலோசகர்
