PUBLISHED ON : அக் 18, 2016

துங்கபத்திரை ஆற்றின் கரையில் தோன்றிய விஜயநகர ஆட்சி காவிரியைத்தாண்டி, வைகை வரைக்கும் விரிந்திருந்தது. தற்போதைய கர்நாடகாவில் உள்ள ஹம்பிதான் (Hampi) அப்போதைய விஜயநகரத்தின் தலைநகர். தற்போது யுனெஸ்கோவின் உலக பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
விஜயநகரப் பேரரசில் பெரும்புகழ் பெற்று விளங்கிய மன்னர் கிருஷ்ண தேவராயர். அவரது ஆட்சிக்காலத்தில் கோயில் கட்டடக் கலையில் ஒரு மறுமலர்ச்சியே ஏற்பட்டது. இன்றைக்கு தென்னிந்தியாவில் இருக்கின்ற பெரும்பாலான பெரிய கோவில்களில் அமைந்திருக்கும் ராஜகோபுர அமைப்புகளும், அழகிய சிற்பங்களுடன் கூடிய கல்யாண மண்டபங்களும் அவரது ஆட்சிக்காலத்தில் உருவானவை.
ஒவ்வொரு பேரரசும் பெரும்பாலும் ஏதாவது ஒரு மாவீரனின் சாகசத்தால் உருவானதாகவே இருக்கும். ஆனால் விஜயநகரப் பேரரசானது, பாமினி சுல்தான்களின் கொடுங்கோலாட்சியில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானது. ஹரிகரர், புக்கர் ஆகியோர் 1336ஆம் ஆண்டு இந்தப் பேரரசைத் தோற்றுவித்தனர். துங்கபத்திரை நதியின் கரையில் உருவான தலைநகருக்கு விஜயநகரம் என்று பெயரிட்டனர். விஜயநகரம் என்ற சொல்லுக்கு வெற்றியின் நகரம் என்று பொருள்.
விஜயநகரத்தின் எழுச்சி, ஒற்றுமையின்றி இருந்த பாமினி சுல்தான்களை இணைய வைத்தது. அவர்கள் அனைவரும் சேர்ந்து 1565ல் தலைக்கோட்டை (Talikota war) என்னும் இடத்தில் போர் தொடுத்து விஜயநகரப் பேரரசை வென்றனர். அந்தப் போரின் முடிவில் விஜயநகரம் அழிக்கப்பட்டது.
எந்தவொரு பேரரசும் ஒரே நாளில் உதயமாகி விடுவதில்லை. அதைப் போலவே ஒரே நாளில் அவை மறைந்துவிடுவதும் இல்லை. விஜயநகரப் பேரரசு தலைக்கோட்டைப் போருக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அழிய ஆரம்பித்தது. கி.பி.1336ல் தோன்றிய இந்த அரசு 1646ல் முடிவுக்கு வந்தது. ஆனால் கோவில் கட்டடக் கலைக்கு அப்பேரரசு உருவாக்கி அளித்த 'ராஜகோபுர' அமைப்பு, காலங்களைத் தாண்டி கம்பீரமாய் நின்றுகொண்டிருக்கிறது.
- சபிதா
