PUBLISHED ON : அக் 15, 2018

ஆசிய சிங்கங்கள், குஜராத்தின் கிர் காடுகளில் மட்டும்தான் வாழ்கின்றன. இங்கு, இந்த ஆண்டில் செப்டம்பர்-அக்டோபர் முதல்வாரம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 23 சிங்கங்கள் இறந்துள்ளன. இதில் 21 சிங்கங்கள் வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளன. குறிப்பாக, கானைன் டிஸ்டெம்பர் வைரஸ் (Canine distemper virus) மற்றும் பபிசியோசிஸ் (Babesiosis) வைரஸ் தாக்குதல்.
பபிசியோசிஸ்:
கால்நடைகளைத் தாக்கும் ஒருவகை வைரஸ். இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை சிங்கங்கள் உண்ணும்போது, அவற்றுக்கும் பரவுகிறது. இந்த வைரஸ், உடலின் சிவப்பு அணுக்களைத் தாக்கும். சிறுநீர் சிவப்பு அல்லது கறுப்பு நிறத்தில் காணப்படும். இதற்கான அறிகுறிகள் உடல் சோர்வு, தூக்கமின்மை. நடப்பாண்டில் கிர் காடுகளில் இறந்த சிங்கங்களில் 17 சிங்கங்கள், இந்த வைரஸ் தாக்குதலால்தான் உயிரிழந்தன.
கானைன் டிஸ்டெம்பர் வைரஸ்
இவ்வகை வைரஸ் வழக்கமாக நாய்களைத்தான் தாக்கும். நாய்களின் செரிமான உறுப்புகள், மத்திய நரம்பு மண்டலப்பகுதி, நுரையீரல் பகுதிகளைப் பாதிக்கும். திடீர் மரபணு மாற்றம் (Mutation) அடைந்த இந்த வைரஸ், காற்று வழியாக சிங்கங்களுக்கும் பரவி வருகிறது. காய்ச்சல், உடல் வீக்கம், வயிற்றுப்போக்கு, கண், மூக்கிலிருந்து நீர்ப்போக்கு, மூக்கு, பாதங்கள் தடித்துப் போதல் ஆகியவை இதற்கான அறிகுறிகள். கிர் காடுகளில் இறந்த சிங்கங்களில், நான்கு சிங்கங்கள் கானைன் டிஸ்டெம்பர் வைரஸ் பாதிப்பால் இறந்தன. இதேபோல், ஆப்பிரிக்காவில் உள்ள, செரங்கெட்டி (Serengeti) வனப்பகுதியில், 1994இல் 30 சதவீதம் சிங்கங்கள் இந்தவகை வைரஸ் தாக்குதலால் இறந்துவிட்டன.
24 மணி நேர கண்காணிப்பு
கிர் வனப்பகுதியில் உள்ள சிங்கங்களை மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது. அவற்றுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தால், உடனடி மருத்துவ உதவி அளிக்கப்படுகிறது. கானைன் டிஸ்டெம்பர் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அறிகுறி தெரிந்த, 27 சிங்கங்களில் இருந்து இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில், 21 சிங்கங்களுக்கு கானைன் டிஸ்டெம்பர் வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது.
வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், சிங்கங்களுக்கு தடுப்பூசி போடவும் ஆலோசனை நடக்கிறது.
சிங்கங்கள் இறப்பு எண்ணிக்கை:
2016 - 104
2017 - 80
2018 செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை - -23
விவாதங்கள்
* ஒரே இடத்தில் சிங்கங்கள் இருந்தால், நோய் எளிதில் பரவும். அதனால் வேறு மாநிலங்களுக்கு அனுப்பலாமா என விவாதிக்கப்படுகிறது. 2013இல் கிர் காடுகளில் இருக்கும் சிங்கங்களில் சிலவற்றை மத்தியப் பிரதேசத்துக்கு அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இதுவரை அமல்படுத்தப்படவில்லை.
* ஆசிய சிங்கங்கள், உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லை. இவற்றைப் பாதுகாக்க பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிர் பகுதியின் பரப்பளவை அதிகரிப்பது; அல்லது குடியிருப்புகளை இடம் மாற்றுவது என வெவ்வேறு கோணங்களில் ஆராயப்படுகிறது.
* வனவிலங்குகளுக்கான தடுப்பூசிகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன. ஒரு தரப்பினர் காட்டில் வன உயிரினங்களுக்கு தடுப்பூசி தேவையில்லை என சொல்கின்றனர். தடுப்பூசி போடவில்லை என்றால், இந்த வைரஸ் எளிதில் மற்ற சிங்கங்களுக்குப் பரவும்; பெரிய இழப்பு வரும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
* எதிர்காலத்தில், வனவிலங்குகளுக்கு வரும் நோய்களுக்கு மருந்துகளை உருவாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
