PUBLISHED ON : அக் 19, 2016

மாத்திரை என்றதும், காய்ச்சல் தலைவலிக்கு உட்கொள்ளும் மருந்துப் பொருள் நினைவுக்கு வரும். தமிழ் இலக்கணத்தில் மாத்திரை என்பது வேறொன்றைக் குறிக்கும். ஓர் எழுத்தை ஒலிப்பதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் கால அளவு மாத்திரை எனப்படும். கால், அரை, ஒன்று, இரண்டு என்று மாத்திரையின் அளவுகள் எண்ணப்படும்.
கண் இமைப்பதற்கு ஆகும் நேரம் ஒரு மாத்திரை. கைச்சொடுக்கும்போது எழும் ஒலியளவும் ஒரு மாத்திரைதான். “இயல்பு எழும் மாந்தர் இமைநொடி மாத்திரை” என்பது நன்னூலின் நூறாம் நூற்பா.
கண் இமைப்பதை இயல்பாகச் செய்வோம். விரைந்தும் இமைக்க முடியாது. மெதுவாகவும் இமைக்க முடியாது. அதுபோல் கைச்சொடுக்குவதை வேகமாகவும் செய்ய முடியாது. மெதுவாகவும் செய்ய முடியாது. அந்தச் செயலில் மனிதர்களின் இயல்பு என்னவோ அப்படித்தான் செய்ய முடியும். கண்களை மெதுவாக இமைக்கிறேன் என்று உங்களால் செய்து காட்ட முடியுமா? முடியாது. மெதுவாகச் சொடுக்கு போட
முடியுமா? முடியாது. அச்செயல்களை இயல்பாகத்தான் செய்ய முடியும். நாமே வலிந்து இயல்புக்கு மாறாகச் செய்ய முடியாது. அதனால்தான் “இயல்பு எழும் மாந்தர் இமை நொடி” என்று நன்னூல் ஆசிரியர் பவணந்தி பொருத்தமாகக் கூறினார்.
கண் இமைக்கும் அளவு ஒரு மாத்திரை. குறில் எழுத்துகளை ஒரு மாத்திரை அளவில் ஒலிக்க வேண்டும்.
நெடில் எழுத்துகளை இரண்டு மாத்திரை அளவில் ஒலிக்க வேண்டும்.
மெய்யெழுத்துகளை அரை மாத்திரை அளவில் ஒலிக்க வேண்டும்.
ஒரு மாத்திரைக்குக் கண்ணிமைக்கும் அளவைப்போல, அரை மாத்திரைக்கு ஏதேனும் அளவு உள்ளதா? “உள்ளல் காலே ஊன்றல் அரையே” என்பது அதற்கான செய்யுள் வரி. நினைப்பதற்கு உரிய காலம் கால் மாத்திரை. நினைத்தது மனத்தில் அமர்வதற்குரிய காலம் அரை மாத்திரை. ஒரு நினைவு நம் மனத்தில் படும் நேரம்தான் அரை மாத்திரை. மெய்யெழுத்துகளைப் போலவே ஃ என்னும் ஆய்த எழுத்துக்கும் ஒலிப்பளவு அரை மாத்திரைதான்.
-தமிழ் மலை

