
இந்தியாவின் எதிர்காலத் தேவைகளுக்காக வியக்கவைக்கும் கட்டுமானப் பணிகளை உருவாக்கிய நான், கர்நாடகாவில் முட்டனஹள்ளி என்னும் ஊரில் பிறந்தேன். ஆரம்ப கல்வியை சிக்கபல்லபுராவிலும், உயர் கல்வியை பெங்களூரிலும் பயின்றேன். இளங்கலைப் பட்டப் படிப்பை, 1881ல் சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்து, கட்டடப் பொறியியல் (சிவில் இன்ஜினியரிங்) கல்வியை புனே அறிவியல் கல்லூரியில் முடித்தேன். பொறியியல் கல்வியை முடித்து, 1884ல் மும்பையில் பொதுப் பணித் துறையில் பணியாற்றினேன். அதன் பிறகு இந்திய நீர்ப்பாசன ஆணையத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.
திடீரெனப் பெருகும் வெள்ளத்தில் இருந்து அணையைக் காப்பாற்றும் விதமாக, தானியங்கி மதகுகளை முதன்முதலில் வடிவமைத்தேன். இந்த மதகுகளை 1903ல் புனே அருகில் உள்ள காடக்வாசலா நீர்த்தேக்கத்தில் நிறுவினேன். இந்தச் செயல்பாடு வெற்றி பெற்றதால், இதே வகை மதகுகள் மைசூர் 'கிருஷ்ண ராஜ சாகரா' அணையிலும் நிறுவப்பட்டன.
ஹைதராபாத் நகரில் 1908, செப்டம்பர் மாதம் வீசிய புயலின் காரணமாகப் பெரு மழை பெய்து வெள்ளம் ஓடியது. அப்போது, நகரைக் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஹைதராபாத் நிஜாம் என்னை அழைத்தார். அதை ஏற்று ஹைதராபாத் நகரில் நவீன வடிகால் அமைப்பை உருவாக்கினேன். என்னுடைய பணிகள் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. விசாகப்பட்டினத்தில் கடலோரப் பகுதிகளைக் கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்கத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்தியதில் முக்கியப் பங்காற்றி இருக்கிறேன்.
மைசூர் மாகாணத்தின் திவானாக 1912ல் பொறுப்பேற்றேன். மைசூர் பல்கலைக்கழகம், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், பத்ராவதி இரும்பு எஃகு தொழிற்சாலை உள்ளிட்ட பல நிறுவனங்களின் உருவாக்கத்திலும் எனது பங்களிப்பு இருக்கிறது. 'இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம்' என்ற நூலை 1934ல் எழுதி பொருளாதாரத் திட்டமிடுதல் பற்றிக் கூறிய முதல் அறிஞரும் நானே! என்னுடைய சேவைகளைப் பாராட்டி இந்திய அரசு 1955ல் மிகஉயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்கிக் கௌரவப்படுத்தியது. 'இந்தியாவின் பொறியியல் துறை தந்தை' எனக் கருதப்படும் என்னுடைய பிறந்தநாள், 'தேசிய பொறியியலாளர் தினம்' எனக் கொண்டாடப்படுகிறது.
சர். மோக் ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா
பிறப்பு: 15.09.1861
மறைவு: 12.04.1962

