
அச்சிறுவனுக்கு ஐந்து வயதிருக்கும் போது, அவனுடைய அம்மா இறந்து விட்டாள். தாய் இறந்த காரணத்தால் பாட்டி வீட்டில் வளர்ந்தான் அச்சிறுவன். அவனுடைய தந்தைக்கு எட்டையபுர அரண்மனையில் பணி. தமிழ், ஆங்கிலம், கணக்கு மூன்றிலும் திறமையுடன் விளங்கினார் அவனது தந்தை. தன்னைப் போலவே தன் மகனும் கல்வியில் சிறப்புடன் விளங்க வேண்டும் என்று விரும்பினார் அவனது தந்தை. மிகவும் கண்டிப்பான அத்தந்தையைப் பார்த்து அச்சிறுவன் பயந்து விலகியே இருந்தான். மகனின் பயத்தைக் கண்ட தந்தை, அவனது அச்சத்தைப் போக்க அடிக்கடி மகனை வெளியில் கூட்டிப்போக ஆரம்பித்தார். இதன் காரணமாக, தந்தை மீதிருந்த அச்சம் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கியது அச்சிறுவனுக்கு.
தான் பணி புரிந்த அரண்மனைக்கும் அவனைக் கூட்டிச் செல்ல ஆரம்பித்தார். அரண்மனைக்குச் சென்ற சிறுவன் அங்கு அரசர்கள் முன்னிலையில் புலவர்கள் பாடல் பாடுவதைக் கண்டான். விவாதங்கள் நடைபெறுவதைப் பார்த்தான். அப்படிப் பார்த்தவனின் மனதிலும் பாடல்கள் பிறக்க ஆரம்பித்தன. அவனும் பாடல் எழுத ஆரம்பித்தான். அரசர் முதல் அவையில் இருந்த அனைவரும் அச்சிறுவனைப் பாராட்டினர். சிவஞானயோகியார் என்பவர் பாராட்டுடன் நிற்காமல், அச்சிறுவனை மேலும் போற்றும் விதமாகச் சரஸ்வதியின் மறுபெயரான 'பாரதி' என்னும் பட்டம் வழங்கினார்.அப்போது அச்சிறுவனுக்குப் பதினொரு வயது.
அப்படிப் பட்டம் வழங்கி பாராட்டுப் பெற்ற சிறுவன்தான் பின்னாளில் மகாகவி சுப்பிரமணிய பாரதியானார்

