PUBLISHED ON : மே 20, 2019

நாம் ஒலிக்கும் ஒலியின் வரிவடிவங்களே, எழுத்துகள். 'அ' என்பது எழுத்து மட்டுமல்ல, 'அ' என்ற ஒலியின் வரிவடிவம்.
'அ' என்ற எழுத்துக்குறிப்பை, 'அ' என்று ஒலிப்போம். மொழி தோன்றும்போது, அத்தகைய ஒலிக்குறிப்புகள் பல ஒன்றுசேர்ந்து ஒரு பொருளைச் சுட்டும் சொல்லாக மாறியது. ஒவ்வொரு சொல்லும் அத்தகைய ஒலித்தொகையிலிருந்து தோன்றியது. 'அம்மா' என்பது மூன்று வகை ஒலிக்குறிப்புகளால் ஆனது. அம்மூன்று வகை ஒலிகளையும் சேர்த்துச் சொல்லும்போது, 'அம்மா' என்ற சொல் பிறக்கிறது. அம்மா என்று எழுதுவதும் இம்மூன்று ஒலி எழுத்துக்களைத்தான்.
ஒரு மொழியின் இலக்கணம், ஒரு சட்டப்புத்தகம் என்றோ, கடுமையான விதிகளின் தொகுப்பு என்றோ கருதக்கூடாது. இது, கடலில் மூழ்கியுள்ள பனிமலையை அறியாமல், வெளித்தெரியும் சிறுதுண்டினைப் பார்த்துவிட்டு அது வெறும் பனிக்கட்டி என்பதற்கு ஒப்பாகும்.
புவியீர்ப்பு விசை என்பது, இயற்கையை ஆழ்ந்து கற்றுப் பெற்ற அறிவு. அதனைப் புறந்தள்ளி விட்டு எதையுமே கற்பிக்க இயலாது. அவ்வாறே, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் பேசிக்கொண்டிருந்த மொழியை, மொழிமுனிகள் கூர்ந்து கவனித்து ஆராய்ந்தனர். ஒலிக்குறிப்புகளின் அடிப்படை அலகுகள் இவை என்று ஒலியமைப்புகளைக் கண்டுபிடித்து, அவற்றை எழுத்துகளாக எழுதி வைத்தனர். அவ்வாறு உருவானதே இருநூற்று நாற்பத்தேழு (247) எழுத்துகள்.
உயிரெழுத்துகள் எல்லாம் ஒரு சொல்லைத் தொடங்கப் பயன்பட்டன. ஒரு தனிப்பட்ட மெய்யெழுத்தில் ஒரு சொல்லைத் தொடங்கவில்லை நாம். ஏனென்றால், இது வெப்ப மண்டலம். வாயைத் திறந்துதான் பேசுவோம். பனிப்பகுதியில் வாழ்ந்த மக்கள் வாயைத் திறந்து பேசினால், உடல்வெப்பம் வெளியேறிவிடும். உடல் வெப்பக்குறைவைத் தவிர்க்க, உதடு பிரிக்காமல் 'இஸ், புஸ்' என்று சொற்களை ஆக்கினார்கள்.
நாம் வெப்பமண்டல மக்கள். நம் உடலிலிருந்து வெப்பம் வெளியேறுவது அவசியம். எனவே, எல்லா ஒலிகளையும் வாயைத் திறந்து தாடையை அகலப் பிரித்து ஒலிகளை எழுப்பினோம். நம் மொழியானது உரத்து ஒலிப்பது. வல்லின ஒலிகளால் மிகுந்திருப்பது. நெடிலோசைகளும் மிகுதி.
திறந்த வாயை மூடித் திறப்பதில் மெய்யெழுத்து ஓசைகள் பல உருவாகும். இப்படித்தான் நம் மொழி உருவானது. இந்த இயற்கையை ஆராய்ந்து கூறப்பட்டதுதான் மொழி இலக்கணம். இலக்கணம் என்பது மொழி இயற்கையைப் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் அடங்கிய பேரறிவு. மொழியைப் பற்றிய அறிவியல்.
- தமிழ்மலை

