PUBLISHED ON : பிப் 01, 2016

நாம் அஞ்சுகிற நோய்களில் மிக முக்கியமானது 'புற்று நோய்' (கேன்சர் - Cancer). இந்த நோய் உடலின் எந்த பாகத்தையும் தாக்கும். புற்று நோய் பாதித்த பகுதியில் செல்கள் (Cells) கட்டுப்பாடில்லாமல் பிரிந்து, புற்றுக் கட்டிகளாகத் திரளும். இந்தக் கட்டிகள் (ட்யூமர்ஸ் - Tumours) சுற்றிலும் இருக்கும் பிற நல்ல செல்களையும் அழித்து, உறுப்புகளின் இயக்கத்தைப் பாதிக்கும்.
பெரும்பாலான புற்று நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முற்றிலுமாகக் குணப்படுத்திவிட முடியும். வளரும் நாடுகளிலும், வளர்ச்சி அடையாத நாடுகளிலும்தான் 60 சதவிகிதப் புற்று நோய் மரணங்கள் நிகழ்கின்றன. இதற்குக் காரணம், மக்களிடையே நோயைப் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதும், அதன் விளைவாக மக்கள் நோய் முற்றிய பிறகு மருத்துவமனைகளுக்குச் செல்வதும்தான்.
பல்வேறு காரணங்களால் புற்றுநோய் வருகிறது. மூன்றில் ஒரு பங்கு புற்றுகள் 1) அதிக எடை 2) நார்ச்சத்து குறைவான உணவு, அதாவது, பழங்கள் காய்கறிகள் குறைவாக சாப்பிடுவது 3) உடற்பயிற்சி செய்யாமை 4) புகைப்பழக்கம் 5) மதுப்பழக்கம் ஆகிய ஐந்து காரணங்களால்தான் ஏற்படுகிறது. இவை எல்லாம் தவிர்க்கக் கூடிய காரணங்கள்தானே!
ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து, நோயைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருந்தால் புற்று நோய்க்கு நாம் 'குட் பை' சொல்லலாம்!
