PUBLISHED ON : டிச 25, 2017

ஆங்கிலச் சிறுவர் இலக்கியத்தின் முக்கிய பெயர்களில் ஒன்று, அனுஷ்கா ரவிசங்கர். மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பிறந்து, படித்து, வளர்ந்து, திருமணத்திற்குப் பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தவர். பலருக்கும் 'கேட்ச் தட் க்ரோகோடைல்' என்ற இவரது புத்தகம் தெரிந்திருக்கும். 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள அனுஷ்கா, சர்வதேச அளவில் விருதுகளையும் பெற்றிருக்கிறார். அவருடன் பேசினோம்.
சிறுவர் இலக்கிய உலகிற்கு எப்படி வந்தீங்க?
நாசிக் என்னோட பூர்வீகம். சின்ன வயசுலயிருந்து படிக்கற பழக்கம் ரொம்ப அதிகம். அப்ப எந்தப் புத்தகம் கிடைச்சாலும் வாசிப்பேன். நேரம் கிடைக்கும்போது எழுதுவேன். குழந்தை பிறந்ததுக்குப் பிறகு அவங்களுக்குக் கதை சொல்ல ஆரம்பிச்சேன். அப்பத்தான் நான் சொல்லும் கதைகளை, ஏன் டிங்கிள் பத்திரிகைக்கு அனுப்பக்கூடாதுன்னு தோணுச்சு. அவங்க நடத்திய சிறுகதைப் போட்டியில என்னோட கதை தேர்வானது. அப்படித்தான் என்னோட எழுத்துப் பயணம் தொடங்கியது.
குழந்தைகளுக்கு எழுதறதுல எந்த மாதிரி சவால்கள் இருக்கு?
நாம எப்பவுமே குழந்தைகள் மாதிரியே இருக்கணும்ங்கறது தான் மிகப்பெரிய சவால். நிறையப் பேருக்கு இந்த ஏரியா தான் கஷ்டம். குழந்தைங்க யோசிக்கற மாதிரி ரொம்ப எளிமையா யோசிக்கணும். ஏன்னா, நம்ப வயசு, அனுபவம் இரண்டும் எழுத்துல வெளிப்படாமப் பார்த்துக்கணும். இல்லைன்னா, நாமளும் பொது வரிசையில வந்துடுவோம். எட்டு வயசுக் குழந்தைகளுக்கு எழுதறோம்ன்னா, அவங்க உலகம் எப்படி இருக்கும், அவங்க எந்த விஷயத்தைப் பத்தி யோசிக்கறாங்க, எப்படி புரிஞ்சுப்பாங்கன்னு பொறுமையா புரிஞ்சுக்கிட்டு அவங்களுக்கு சொல்லணும். இது மதில்மேல் பூனை கதை தான்.
சிறுவர்கள் இலக்கியத்தோட தற்போதைய போக்கு?
முன்னாடில்லாம் இதிகாசக் கதைகள், நாடோடிக் கதைகள் தான் நம்மூர்ல அதிகம் இருந்தது. அதுக்கு அப்பறம் மாயப் புதினங்கள் (ஃபாண்டசி கதைகள்) வந்தது. இப்ப நிறைய புது எழுத்தாளர்கள் புதிய விஷயங்களை யோசிக்கிறாங்க. எழுதறாங்க. வரலாறு, உண்மைக் கதைகள், சமூகக் கதைகள்னு புதிய விஷயங்களை எழுதறாங்க. அதேமாதிரி எழுத்து நடையும் குழந்தைகளை ஈர்க்கற மாதிரி இருக்கு. நம்ம டிரெண்டுக்கு ஏத்தமாதிரி குழந்தைகளுக்கு யோசிச்சு எழுதறதால, இப்ப நிறைய சாய்ஸ் உண்டு.
சிறுவர்கள் 'டிவி', 'இன்டர்நெட்'ன்னு தான் இருக்காங்க. புத்தகம் எங்க படிக்கறாங்கன்னு நிறைய பேர் சொல்றாங்களே?
அதை நான் ஒத்துக்கவே மாட்டேன். ஒரு வகுப்புல 5 -- 6 பேரிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருக்கும். நான் படிக்கும்போது அப்படித்தான் இருந்தது. எங்களுக்குள்ளேயே புத்தகம் மாத்திக்குவோம். லைப்ரரி போய் வாசிப்போம். இன்னிக்கு அப்படி இல்லை. நிறைய பள்ளிகள்ல லைப்ரரி க்ளாஸ்ன்னு ஒரு மணிநேரம் இருக்கு. அதைத் தாண்டி நிறைய புது புத்தகங்கள் வந்துக்கிட்டே இருக்கு. அதை வாங்கறதுக்கான ஆட்களும் அதிகமாகியிருக்காங்க. ஆனா ஒரு விஷயம், என்னன்னா, முன்னாடில்லாம் ஒரு புக்கை எடுத்தா ஒரே மூச்சுல முடிப்போம். இன்றைய குழந்தைங்க வேறவேற வேலைக்கு நடுவுல கொஞ்சநேரம் படிக்கறாங்க.
புத்தக வாசிப்பை யாராலும் நிறுத்த முடியாது.
சில முக்கிய புத்தகங்கள்
மாயின் அண்ட் தி மான்ஸ்டர் (Moin and the monster)
எலிஃபெண்ட்ஸ் நெவர் ஃபர்கெட் (Elephants never forget)
டைகர் ஆன் எ ட்ரீ (Tiger and a tree)
காட்ச் தட் க்ரோகோடைல் (Catch that crocodile)
ஒன், டூ, த்ரீ (One, two, three)
டூ மார்க்கெட், டூ மார்க்கெட் (To market, to market)
விஷ் யூ வேர் ஹியர் (Wish you were here)