/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
கட்சி குடும்பங்களின் வளர்ச்சி ஒட்டுமொத்த மாநில வளர்ச்சி ஆகாது!
/
கட்சி குடும்பங்களின் வளர்ச்சி ஒட்டுமொத்த மாநில வளர்ச்சி ஆகாது!
கட்சி குடும்பங்களின் வளர்ச்சி ஒட்டுமொத்த மாநில வளர்ச்சி ஆகாது!
கட்சி குடும்பங்களின் வளர்ச்சி ஒட்டுமொத்த மாநில வளர்ச்சி ஆகாது!
PUBLISHED ON : ஜூன் 30, 2024 12:00 AM

உலக அரசியலின் பக்கத்தை பின்னோக்கி பார்க்கும்போது, உலகை ஆட்டிப் படைத்த வலிமைமிக்க அமெரிக்க டாலருக்கு முடிவு வந்துள்ளதோ எனத் தோன்றுகிறது.
இரண்டாவது உலக யுத்தத்தின் போது, ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதாரத்தில் விழுந்த நேரத்தில், அமெரிக்கா, ஆயுதங்களையும், உணவுப் பொருட்களையும், துணிகளையும், மருந்துகளையும் அனுப்பி உதவியது. இதற்கு ஐரோப்பிய நாடுகள் தங்களிடம் இருந்த தங்கத்தை, அமெரிக்காவிடம் கொடுத்தன; உலகின் மொத்த தங்க இருப்பின் 80 சதவீதம் அமெரிக்காவுக்கு சென்றடைந்தது.
அமெரிக்கா டாலரில் பணம் கொடுத்தால், தங்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற, 'பிரைட்டன் ஒப்பந்தத்தை' 40 நாடுகள் ஏற்றுக் கொண்டன. உலக நாடுகள், டாலரை வாங்க ஆரம்பித்தன. அமெரிக்கா கண்மூடித்தனமாக டாலரை அச்சடித்தது; டாலரை வலிமையான நாணயமாக்கியது.
இது அமெரிக்காவின் ராஜதந்திரம்.
வளரும் நாடுகள், தங்கள் நாணயத்தை அச்சடித்து, விலைவாசி ஏற்றத்தால், பெரும் பொருளாதார சிக்கலில் தவிக்கும் என்பது, அமெரிக்காவுக்கு நன்கு தெரியும். இதனால், வளரும் ஏழை நாடுகள் நாணயங்களைக் கொடுத்து, டாலரை வாங்கி, வர்த்தகம் செய்ய வேண்டி இருந்தது. வணிகத்தில், அமெரிக்காவை சார்ந்து இருக்க வேண்டி இருந்தது.
உலக நாடுகள், தங்கள் நாட்டு நலனுக்காக, அமெரிக்காவின் டிரஷரி பாண்டுகளை வாங்க, அந்நாடு நிர்ப்பந்தித்தது.
அளவற்ற டாலர்களை வைத்திருந்த அமெரிக்கா, உலக வங்கியை துவக்கியது. வளரும் ஏழை நாடுகளுக்கு கடன் கொடுத்து, கடன்காரர் நாடாக்கியது. மேலும், ஐ.எம்.எப்., அமைப்பை ஏற்படுத்தியது. வளரும் நாடுகள், பற்றாக்குறை பணத்திற்கு, ஐ.எம்.எப்.,மிடம் கையேந்துவர்.
டாலருக்கு வந்த சோதனை
உலக நாடுகள் தங்கத்தை வாங்க ஆரம்பித்த பின், அமெரிக்காவின் தங்க இருப்பு, 2 லட்சம் டன்னிலிருந்து, 2,000 டன்னாக குறைந்தது. இரண்டாவது உலகப் போரில், இத்தாலியால் தாக்கப்பட்ட சவுதி அரேபியா, தன் எண்ணெய் வளத்தையும், நாட்டையும் பாதுகாக்க, டாலரில் எண்ணெய் விற்று, பிரதிபலனாக ராணுவ பாதுகாப்பு என, 50 ஆண்டு ஒப்பந்தம் போட்டது. மற்ற எண்ணெய் நாடுகளும் இதில் சேர்ந்தன.
கடந்த, 2௦24 ஜூன் 9 தேதிக்குப் பின், சவுதி அரேபியா, இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை. இதற்கு சூத்திரதாரி, சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சுல்தான்!
இந்த மாற்றத்தால், உலகப் பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கும் அமெரிக்க டாலர், மதிப்பை இழக்கும்.
சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா, பாதிப்பை ஏற்படுத்துமா?
புவிசார் அரசியலை, பின்னோக்கி பார்த்தால் சில உண்மைகள் தெரியும்.
ஈராக்கின் சதாம் உசேன், லிபியாவின் கடாபி. இருவரும் உள் நாட்டு எண்ணெய் வணிகத்தை அந்தந்த நாட்டு நாணயத்தில் விற்க முடிவு எடுத்தனர். அதன் விளைவாக அங்கு உள்நாட்டு கலவரம் ஏற்பட்டு, இரு தலைவர்களும் வீழ்த்தப்பட்டனர். இதற்கு பின் புலம் அமெரிக்கா என்பதை உலகறியும்.
இதுபோல சவுதியில் நடக்குமா என்றால், அது அவ்வளவு எளிதல்ல. ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜிங், சவுதி இளவரசர் முகமது பின் சுல்தான் ஆகியோர் நண்பர்கள். மேலும் ரூபாயில் வர்த்தகம் செய்யும் இந்தியாவும், சவுதிக்கு உதவியாக இருக்கும்.
உலகில் எண்ணெய் வளம் கொண்ட மூன்று நாடுகள் அமெரிக்கா, ரஷ்யா, சவுதி அரேபியா. சீனா, டாலருக்கு மாற்றாக, ரஷ்யாவிடம் தன் நாணயமான யுவானில் வாங்க ஆரம்பித்தது. இதேபோல் இந்தியாவும், ரஷ்யாவிடம் இந்திய ரூபாயில் கச்சா எண்ணெயை வாங்குகிறது. சவுதி அரேபியாவும், அந்தந்த நாட்டு நாணயத்தில் எண்ணெயை விற்க ஒப்புக் கொண்டது.
அமெரிக்காவில் ஏற்படும் மாற்றம்
டாலர் சரிவை நிறுத்த, ரிப்போ வட்டி விகிதத்தை அமெரிக்கா உயர்த்தி விடும். இதனால் கிரெடிட் கார்டு கலாசாரத்தில் பழக்கப்பட்ட அமெரிக்க மக்கள், கிரெடிட் கார்டுகள், வீடு, கார் கடன் வட்டி உயர்வால், இ.எம்.ஐ., கட்ட முடியாமல் தவிப்பர். ஆடம்பர பொருள்கள் விலை உயர்ந்து விடும். அவர்கள் வாங்கும் மாத சம்பளத்தில், சேமிப்பு இருக்காது.
மேலும் ஐ.டி., துறையில் பணியாற்றும் இந்தியர்கள் வாங்கும் சம்பளமும் குறைவாகி விடும். இதனால் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பும் பணமும் குறைந்து விடும்.
இந்தியாவில் அமெரிக்காவின் டாலரின் மதிப்பு குறைவால், மதத்திற்கு எதிராக துாண்டி விடுபவர்களுக்கும், மிஷனரிகளுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் அமெரிக்க கம்பெனிகளிடமிருந்து வரும் பணம் குறைந்து விடும்.
இந்தியாவுக்கு, மலிவான விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கும். இதனால், நம்முடைய இறக்குமதி டாலர் குறையும்; உற்பத்தி செலவு குறையும். உள்நாட்டிலேயே தயாரித்து ஏற்றுமதி செய்யும் விவசாயம், ஜவுளி, மருந்துகள் ஏற்றுமதியில், டாலர் வருமானம் குறையும்.
நம் நாட்டில் வாழும் 140 கோடி மக்களில், 30 சதவீதம் பேர் இளைய சமுதாயத்தினர். அனைவரும் 20 முதல் 30 வயது வரை உள்ளவர்கள். இவர்களின் மனித வளம் நாட்டிற்குத் தேவை.
ஆனால், நம் நாட்டில் ஜாதிய அரசியலை வளர்க்கும் கட்சிகள், இந்த சமுதாயத்தினரை, முன்னேற முடியாமல், குடிகாரர்களாக ஆக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன.
தமிழகத்தில் 40 சதவீதம் பேர் குடிகாரர்களாக இருக்கின்றனர். காசுக்கு ஓட்டு வாங்கி, ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து, 33 சதவீத கமிஷன் வாங்கிக் கொழிக்கும் அந்த அரசியல் குழுவினர் மட்டும், எக்கச்சக்க சம்பாத்தியத்தில் திளைக்க, மக்களும், இளைய சமுதாயத்தினரும் சராசரி வருமானத்தில், கைக்கும் வாய்க்கும் சண்டையிடும் அளவில் மட்டும் குடும்பம் நடத்த வேண்டிய சூழல் நிலவுகிறது.
'நாம் ஓட்டு போட்டு, நம்மை வளர்க்காமல் இந்த 33 சதவீத கமிஷன் கட்சியினர் மட்டும் வளர்கின்றனர்' என்பதை மக்கள் உணராத வரை, மக்களுக்கு முன்னேற்றம் இல்லை.
டாக்டர் சு.அர்த்தநாரி
இதய ஊடுருவல் நிபுணர்
மொபைல்: 98843 53288