/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூரில் 15 ஆண்டுகளில் 150 நிகழ்ச்சிகள்
/
சிங்கப்பூரில் 15 ஆண்டுகளில் 150 நிகழ்ச்சிகள்
நவ 27, 2025

சிங்கப்பூரில் கல்விச் சார்ந்த சமூக நலப்பணிகளை ஆற்றிவரும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம், 22 நவம்பர் 2025 அன்று சங்கத்தின் 15வது ஆண்டு நிறைவு விழாவையும், கல்லூரியின் 75வது ஆண்டு பவள விழாவையும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்களில் மிகச் சிறப்பாக நடத்தியது.
2010ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட இச்சங்கம், மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், பொதுமக்களுக்கான சொற்பொழிவுகள், தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகள், வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்துதல், குடும்ப தினம், இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிகள், நடைப்பயிற்சிப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள், நோன்புத் துறப்பு நல்லிணக்க நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கு கல்வி உபகார நிதி, முதியோர்களுக்கு சக்கர நாற்காலி மற்றும் உணவுப் பொருட்கள் நன்கொடை, சிறுவர்களுக்கு புத்தாடை நன்கொடை, மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் நன்கொடை, சமூக அமைப்புகளோடு ஒருங்கிணைந்து தொண்டூழியம் செய்தல் உள்ளிட்ட பல சமூக நல சேவைகளையாற்றி வருகிறது.
சங்கத்தின் தலைவர் முனைவர் மு. அ. காதர், அவரது வரவேற்புரையில், கடந்த 15 ஆண்டுகளில் இச்சங்கம் 150 நிகழ்ச்சிகளை நடத்தி அரிய சாதனைப் படைத்திருக்கிறது என்று குறிப்பிட்டார். சங்கத்தின் செயலாளர் கணிதப் பேராசிரியர் அமானுல்லாஹ், “எங்கள் பணி” என்ற தலைப்பில் சங்கத்தின் சேவைகளைப் பற்றி உரையாற்றினார்.
சங்கத்தின் 150 நிகழ்ச்சிகளின் தொகுப்பாக உருவாக்கப்பட்ட காணொளி அங்கத்தைத் தொடர்ந்து, கல்லூரியின் பொருளாளர் ஹாஜி எம். ஜெ. ஜமால் முஹம்மது, கல்லூரி முதல்வர் டாக்டர் து. இ. ஜார்ஜ் அமலரெத்தினம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
SG60 எனும் சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டை கொண்டாடும் வகையில், ஆசியான் கவிஞர் க. து. மு. இக்பால் இயற்றிய “சின்னஞ்சிறு எழில் நாடு” என்ற குழுப்பாடலை இசைமணி பரசு கல்யாண் இயக்கத்தில் சிதாந்த் பரசு கல்யாண், வேதாந்த் பரசு கல்யாண், வியாசன் வெங்கடேஷ், ஸ்ரியா ரகு, இஷான் கார்த்திக், சித்தேஷ் கார்த்திக், ஷாய் காத்யாயானி ஆகியோர் இனிமையாகப் பாடினர்.
வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், டாக்டர் ஹமீது ரசாக், 15 ஆண்டுகளில் இச்சங்கம் 150 நிகழ்ச்சிகள் நடத்தி சாதனைப் படைத்திருப்பதைப் பாராட்டினார்.
SG60 நடைப்பயிற்சி போட்டியில் வெற்றிப் பெற்ற முஹம்மது ஹஜ், பஷீர் அஹமது, ஹௌது நைனார் ஆகியோருக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளும், குழுப் பாடல் பாடிய மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கினார்.
சங்கத்தின் 150 நிகழ்ச்சிகள், கல்லூரியின் சாதனைகள், சமூகத் தலைவர்களின் வாழ்த்துச் செய்திகள், கவிதைகள், கட்டுரைகள், சான்றிதழ்கள், வண்ணப் படத்தொகுப்பு அடங்கிய 15ஆம் ஆண்டு சிறப்பு மலரை, சிறப்பு விருந்தினர் வெளியிட்டார்.
புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தின் தலைவர், கவிஞர் தங்கம் மூர்த்தி “மீண்டும் ஒரு கருவறை தந்த தாயே!” என்ற கருப்பொருளில் நகைச்சுவை கலந்த சிறப்புரையாற்றினார்.
கல்லூரியின் உதவிச் செயலாளர் முனைவர் க. அப்துஸ் சமது, முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் முனைவர் மு. சையது அலி பாதுஷா, விடுதி இயக்குநர் முனைவர் கா. ந. முஹம்மது பாசில், கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர் எம். ஜெ. முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகிக்க, சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் அப்துல் சுபஹான் இந்நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
கவிமாலை காப்பாளர், புதுமைத்தேனீ கவிஞர் மா. அன்பழகனின் கைவண்ணத்தில் உருவான தமிழ் வாழ்த்துப் பாடலுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்களும், பொதுமக்களும், சங்கத்தின் உறுப்பினர்களும் சுமார் 300 பேர் கலந்து சிறப்பித்தனர்.
- சிங்கப்பூரிலிருந்து நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement

