/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
பேரவையின் 37 ஆவது தமிழ்விழாவும் நானும்!
/
பேரவையின் 37 ஆவது தமிழ்விழாவும் நானும்!
ஆக 07, 2024

2024 சூலை 4,5,6 தேதிகளில் வடமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் சான் ஆண்டோனியோ தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்திய 37 ஆவது தமிழ்விழாவினை ஒரு மாதம் கழித்து அசைபோடுகின்றேன்!
ஆயிரக்கணக்கில் தமிழ் நண்பர்கள் குடும்பமாகவும் தனித்தும் பங்கு கொண்டது
திருவிழாக் கோலமாக சான் ஆண்டோனியோ நகரின் டௌவுன்டவுன் எனும் ஊரின் மையப்
பகுதி காட்சியளித்தது.
பட்டுப்புடவைகளும் பட்டுவேட்டிகளும் சரசரக்க பெரியவர்களும், அதேபோல் பாரம்பரிய உடைகளில் குழந்தைகளும் அரங்கம் முழுவதும் நடமாடியது நினைவில் ஓடுகிறது.
நானும் குடும்பத்தோடு பங்கு கொண்டது பெரும் மகிழ்வை அளிக்கின்றது. சூலை 3
ஆம் தேதியே நண்பர்கள் நம் வீட்டுக்கு வர உற்சாக மனநிலை ஆரம்பமாகியது.
இவ்விழாவில் எனது பங்கை பெரும் மகிழ்வோடு கூறுகிறேன்.
கடந்த ஆறுமாத காலமாக இவ்விழாவின் சிறப்பு மலருக்கு இதன் தலைமைப் பொறுப்பினை நான் ஏற்று, 15 பேர் கொண்ட குழு, வேலைகளைத் தொடங்கி உழைக்க ஆரம்பித்து சிறப்பாக உருவாக்கினோம். அதன் வெற்றியையும் கண்டோம்.
3 நாட்கள் நடந்த விழாவில் ஆவுடையப்பன் நடத்திய விவாத மேடையிலும்,
ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றத்திலும் பங்கு கொண்டதும், கவிதா ஜவஹரின்
குழுவில் நாங்கள் இருவர் இருந்ததும் மிக மிகப் பெருமையாக உணர்கின்றேன்.
ஆதவன் மற்றும் இரு நண்பர்கள் எதிர்அணியில் கலந்து கொண்டனர். பலருக்கு
மத்தியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என அறிந்ததும் மிகமிக மகிழ்ச்சி!
மேலும் இரண்டாம் நாள் இரவில் 100 க்கும் மேற்ப்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு அரங்கம் அதிர சிறப்பித்த “மரபுக்கலைகள” நிகழ்வை அம்மேடையில் தொகுத்து வழங்கியதையும், அதற்கு நான் பெற்ற பாராட்டுகளையும் என்றும் மறக்க மாட்டேன். நல்ல உச்சரிப்பிற்காக என்னைத் தேர்ந்தெடுத்த பிரவீணா வரதராஜன், பிரதீபா மற்றும் மோகன் தாமோதரன் ஆகியோருக்கு மிக்க நன்றி!
அதனை அடுத்து நான் சந்தித்த ஆளுமைகளைக் கூற வேண்டும். மனநல மருத்துவர்
திருநாவுக்கரசுவின் நிகழ்வில் கலந்து கொண்டதும், பழனிவேல் தியாகராஜன்
மற்றும் சென்னை மேயர் பிரியாவைச் சந்தித்ததும், பட்டிமன்றத்தின் மூலம்
கவிதா ஜவஹர் மற்றும் ஞானசம்பந்தம் இருவருடனும் ஏற்பட்ட குடும்ப நட்பும்
மிகச்சிறப்பு.
அவர்கள் அனைவருடனும் மதுரை மெஸ் எனும் உணவகத்தில் குடும்பத்தோடும் நட்புகளோடும் மதிய உணவு சாப்பிட்டது, போகும் வழியில் எங்களது காரில் கால்டுவெல் மற்றும் ஞானசம்பந்தம் சுவைமிக்க பல சம்பவங்களை பேசிக் கொண்டுவர நான் அதை வீடியோவில் பதிவு செய்தது, ஞானசம்பந்தத்தையும் கவிதா ஜவஹரையும் ஷாப்பிங் அழைத்துப் போனது, இருவரும் எங்கள் இல்லம் வந்தது, எனது தனிப்பட்ட விருப்பத்திற்காக “ஆண்டாளின் வரலாற்றை” ஞானசம்பந்தம் அழகாய்ச் சொன்னது, காஃபி மற்றும் இரவு உணவு கட்டிக் கொடுத்தது, என சிறப்பான சம்பவங்கள் ஏராளம்!
இவ்விழா எனக்கு நல்ல ஆன்றோர்களின் அன்பும் நட்பும் கிடைக்கச் செய்தது மட்டுமின்றி பல படிப்பினைகளையும் அளித்தது என்றே உணர்கின்றேன்.
பல நண்பர்களை, உதவி செய்தவர்களை சந்தித்ததும் நான் சிலருக்கு உதவ வாய்ப்புக்கள் கிடைத்ததும் என்றும் நினைவில் நிற்கும்!
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
Advertisement