/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
உணவு
/
மைசூர்பாவை 'ராஜ சுவை' என அழைத்தால் தவறில்லை!
/
மைசூர்பாவை 'ராஜ சுவை' என அழைத்தால் தவறில்லை!
ADDED : அக் 16, 2025 05:38 AM

1895 பிப். 1ம் தேதி மைசூரின் மன்னராக பொறுப்பேற்றார் நான்காம் கிருஷ்ணராஜ உடையார். இவருக்குத் தெரியாது, நூற்றாண்டுகளுக்கு தனது பெயரை வரலாறு இனிமையாக நினைவில் வைத்திருக்குமென்று.
இவரது அரண்மனை அமுதுமடத்தில்தான், முதன்முதலில் மைசூர்பா உருவானது. அரண்மனை சமையல் கலைஞரான காகாசுர மாடப்பா, கடலை மாவு, சர்க்கரை பாகு, நெய், ஏலக்காய் பொடியைப் பயன்படுத்தி, முதன்முதலில் ஒரு இனிப்பு வகையை உருவாக்கினார்.
கிட்டத்தட்ட தற்செயலாக உருவான, அந்த பாகு பதத்தில் இருந்த பதார்த்தம், கிருஷ்ணராஜ உடையாருக்குப் பிடித்துப்போய்விட, இதன் பெயர் என்ன எனக் கேட்டிருக்கிறார். சட்டென, 'மைசூர் பாகு' என்றிருக்கிறார் காகாசுர மாடப்பா.
அன்றிலிருந்து ராஜ விருந்துகளில், தவறாமல் இடம்பிடித்தது மைசூர்பா. காகாசுரா மாடப்பாவுக்கு அரண்மனை வெளிப்புறத்தில், இனிப்புக் கடை வைக்க அனுமதி அளித்தார் மன்னர். மாடப்பாவின் வாரிசுகள், இன்றும் மைசூர்பா தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்செயலாக உருவான ஒரு பதார்த்தம், மக்களின் நாவை அடிமைப்படுத்தி வைத்திருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஏனென்றால் வாயில் போட்டவுடன், கரைந்து போகும் அதன் சுவை அப்படி!