PUBLISHED ON : மே 20, 2015

'வயிற்றுப் பசிக்கு உணவில்லாத துயரத்தை விட, அன்புப் பசிக்கு ஆதரவில்லாத உயிரின் கொடுமை கொடூரமானது' என, ப்ரியா என்னிடம் தெரிவித்தபோது, சற்றே பதறித்தான் போனேன், சிறிய வயதில் சித்தாந்தம் பேசுகிறாரே என்று.
நான் சந்தித்த நோயாளிகளிலேயே, மறக்க முடியாத ஒரு நபர் என்றால் அது, ப்ரியாவாகத்தான் இருக்கும். ப்ரியாவுக்கு மன அழுத்தம் இருந்ததால், என்னிடம் அழைத்து வந்திருந்தனர்.
'உன் பிரச்னை என்னம்மா?'
பதிலளிக்க விரும்பாதவராய் என் மேஜை மேலிருந்த காகிதத்தில் கிரிக்கெட் மட்டையை வரைந்தார்.
'உன் பிரச்னை கிரிக்கெட்டா?'
'ஆமாம்! எனக்கு கிரிக்கெட் பிடித்தது; நேசித்தேன். ஆனால், தற்போது வெறுக்கிறேன்'
'என்ன பிரச்னை என விவரித்தால் தான், நான் உதவ முடியும்'
'அது எங்கள் கல்லூரியின் விளையாட்டு மைதானம். அதை நான் கடந்து போகையில், மாணவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சட்டென்று பலத்த கைதட்டல். 'சூப்பர்டா! சிக்ஸர்' என்று மற்ற மாணவர்கள், சித்தார்த் அடித்த பந்திற்கு ஆர்ப்பரித்தனர். இந்த காட்சி கல்லூரி வளாகத்திற்குள் அடிக்கடி நிகழும். மாணவர்கள் மத்தியில் மட்டுமல்ல; மாணவியர் மத்தியிலும் சித்தார்த் பாப்புலராக இருந்தான்.
'அதனால், என்மனது அவனை நேசிக்கத் துவங்கியது. என் காதல், அவனுக்கும் தெரிந்து, என்னை நேசிக்க துவங்கினான். கல்லூரி படிப்பு முடிந்தது. விளையாட்டில் முதலிடம் என்பதாலேயே சித்தார்த்திற்கு வேலையும் உடனே கிடைத்தது. திருமணம் முடிந்து, நான்கு மாதங்களிலேயே தனிமை உணர்ந்தேன் டாக்டர்!'
'காரணம்?'
'வார நாட்களில் அலுவலகம். வார இறுதி நாட்களில் அவருக்கு கிரிக்கெட். அப்போதுதான் புரிந்தது. சித்தார்த்திற்கு எல்லாமே கிரிக்கெட் தான் என்று. அன்று முதல், குழந்தைகள் தான் வாழ்க்கை என்று மனதை தேற்றிக் கொண்டு, சித்தார்த்திடம் இருந்து மனதளவில் விலகினேன். அதனால், தனிமையை உணர்ந்தேன்'
சட்டென்று புரிந்தது, ப்ரியா, மனத்தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று.
மனத்தளர்ச்சி, மன அழுத்தத்தில் தள்ளியிருக்கிறது. சிகிச்சை மட்டும் என்றால் பிரச்னை தீராது என்பதால், சித்தார்த்தை வரச் சொன்னேன். இருவருக்கும் 'கவுன்சிலிங்' அளிக்கப்பட்டது. ப்ரியாவிற்கு, 'கவுன்சிலிங்' மட்டுமின்றி, மருந்துகளும் கொடுக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகள் சிகிச்சையில் இருந்தார், ப்ரியா. வாழ்க்கைக்கு தேவையான விஷயங்கள் கிடைக்காத போது, மனம் ஏங்குகிறது; ஏக்கம், மன நோய்க்கு ஆளாக்குகிறது.
மனமும், உடல்நலமும், நாணயத்தின் இருபக்கங்கள். ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மனிதர்கள், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தினாலே, மனமும், உடலும் நலமாக இருக்கும்.
- ரவி சாமுவேல், மனநல ஆலோசகர்
94440 22054
