PUBLISHED ON : டிச 16, 2020

கத்தரிக்காய், வெண்டைக்காயில் சொத்தை இருந்தாலோ, புழு, பூச்சி இருந்தாலோ அந்த பாகத்தை பயன்படுத்த மாட்டோம்; துாக்கிப் போட்டு விடுவோம். ஆனால், வாயில் தோன்றும் சொத்தைப் பற்களை பயன்படுத்தி, தினமும் உணவு சாப்பிடுகிறோம்.
வாய் வழியே அல்லது வாயில் இருக்கும் தொற்று கிருமிகள் தான் இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல் என்று பிரதான உறுப்புகளில் கோளாறை ஏற்படுத்துகின்றன.பற்களின் இடுக்குகளில் ஏதேனும் சிக்கினால், உடனே குச்சி, ஊசி என்று கூர்மையான பொருட்களை பயன்படுத்தி குத்தும் பழக்கம் நமக்கு இருக்கிறது.இதனால் புண் ஏற்பட்டால், ஆறுவதற்கு நான்கைந்து நாட்கள் ஆகலாம். ஆனால், அப்போதும் கவலைப்படாமல், சூடான, காரம் நிறைந்த உணவுகளை சாப்பிடுகிறோம்.
விளைவு, புண் ஆறாமல் புரையோடி, ஈறுகளில் அழற்சியை ஏற்படுத்துகிறது.சர்க்கரை கோளாறு, இதய, சிறுநீரகக் கோளாறு, ஆர்த்ரடீஸ் போன்ற பிரச்னைகள் இருப்பவர்களில், 98 சதவீதம் பேருக்கு ஈறு அழற்சி நோய் அல்லது வாயில் புண் இருந்திருக்கும்! இதை கவனிக்காமல் விட்டுபெரிய பிரச்னையை உண்டு பண்ணி இருப்பர்.பற்களின் மேல் பகுதியில் உள்ள எனாமல் எனப்படும் மேற்பூச்சு, உடலில் இருப்பதிலேயே கடினமான பகுதி.எதனாலும் இதை சிதைக்கவே முடியாது. ஆனால் வாய், பற்களை சுத்தமாக பராமரிக்காவிட்டால், பற்களின் மேல் அழுக்கு படிந்துவிடும். பல் இடுக்குகளில் உணவுத் துகள்கள் தங்கி, நாளடைவில் கிருமிகள் உண்டாகும்.
பல் இடுக்கின் ஒரு துளியை நுண்ணோக்கியில் வைத்து பார்த்தால், ஆயிரக்கணக்கில் நுண்ணுயிரிகள் இருப்பது தெரியும். அப்படியானால், வாய் முழுதும் எத்தனை கோடி இருக்கும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்!இவ்வளவு கிருமிகள் இருந்தாலும், பல் எனாமலை ஒன்றும் செய்யாது. ஆனால், ஸ்ட்ரெப்டோகாக்கஸ் என்ற ஒரு பாக்டீரியா உருவாகி விட்டால், எனாமலை அழித்து, சொத்தையை ஊடுருவினால், ரத்த ஓட்டத்தை தடுத்து, சீழ் பிடித்துவிடும்.வாய் சுகாதாரத்தை முறையாக பராமரிக்க, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, பல் டாக்டரிடம் சென்று முழுமையாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
டாக்டர்கணேஷ் வையாபுரி,
பல் மருத்துவர், சென்னை.
91762 10077, 044 - 2833 3077

