தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மரபணுக்களையே மாற்றும் 'பர்கர்!'

மரபணுக்களையே மாற்றும் 'பர்கர்!'

மரபணுக்களையே மாற்றும் 'பர்கர்!'


PUBLISHED ON : ஜன 02, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 02, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இயற்கையின் மிகச் சிறந்த வடிவமைப்புகளில் ஒன்று, மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றல். உயிருள்ள நுண் கிருமிகளுக்கு எதிராகவும், உயிரற்ற திட, திரவ பொருட்களுக்கு எதிராகவும் மிகச் சரியாக செயல்பட்டு, உடல் உறுப்புகளை அழிவிலிருந்து வாழ்நாள் முழுதும் பாதுகாக்கும் வல்லமையுடன் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த சீரான செயல்பாடு, மரபணுக்கள் மூலமாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும். வெகு அரிதாக இக்கட்டுக்கோப்பில் சிறு சிதைவு ஏற்படலாம். ஆனால், சமீப காலங்களில் இந்த கட்டுக்கோப்பான எதிர்ப்பாற்றல் கட்டமைப்பில் சீரற்ற தன்மை ஏற்பட்டு, மரபணுக்களிலேயே மாற்றங்கள் ஏற்படத் துவங்கி உள்ளன.

நோய் எதிர்ப்பாற்றலில் மாற்றம், கோளாறுகள் ஏற்படும் போது, தன் சொந்த உடல் உறுப்புகளையே எதிரியாக பாவிக்கும்; நம் சொந்த எதிர்ப்பணுக்களே நம் உறுப்புகளை அழிக்கத் துவங்கும். எந்த உறுப்பை, நோய் எதிர்ப்பணுக்கள் தாக்குகிறதோ, அந்த உறுப்பு செயலிழக்கும். இப்படி உடலே உடலுக்கு எதிராக செயல்படுவதால் ஏற்படும் நோய்களை தன்னெதிர்ப்பு நோய்கள் - 'ஆன்டி இம்யூன் டிசீஸ்' என்கிறோம்.

இது உடல் முழுவதையோ, மலக்குடல், தைராய்டு சுரப்பி, மூட்டு ஜவ்வு, சிவப்பணுக்கள், ரத்த நாளங்கள், தோல் என்று தனிப்பட்ட உறுப்பையோ தாக்கலாம். பாதிக்கப்பட்ட உறுப்பை பொறுத்து அறிகுறிகள் தோன்றும். நுரையீரல் பாதிக்கப்பட்டால், மூச்சு திணறலோடு வாழ்க்கை நகரும்.

உணவு முறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும், மன அழுத்தமுமே தன்னெதிர்ப்பு நோய்களுக்கு முக்கிய காரணம். நம் நாட்டு உணவு சந்தை, 32 சதவீதம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஆனது; இதில் மைதாவால் தயாரிக்கப்படும் பேக்கரி பொருட்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

பீட்சா, பர்கர், நுாடுல்ஸ் ஆகியவை நடுத்தர மக்களால் நாகரிக குறீயிடாகவும், பொருளாதார மேம்பாட்டின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. பெரு வணிக நிறுவனங்களின் இந்த கருத்து திணித்தல், பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளின் செய்முறையும், அதில் சேர்க்கப்படும் வேதிப் பொருட்களும் உடலை கடும் மாற்றத்திற்கு உட்படுத்துகின்றன. இவை, குடலில் உள்ள நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை அழிப்பதோடு, தடுப்பு அரண்களையும் உடைக்கிறது. இதனால், குடல் வழியாக வெளியேற்றப்படும் நச்சு பொருட்கள் ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, எதிர்ப்பாற்றல் செயல்பாட்டை மாற்றுகிறது.

இது தொடர்ந்து நிகழும்போது, மரபணுக்களில் மாற்றங்கள் உருவாகும்; பலவீனமான ஒரு தலைமுறையை உருவாக்கும் ஆபத்து நிகழ்ந்து வருகிறது. மனித குடலில் வாழும் கோடிக்கணக்கான நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், உடலின் பல்வேறு செயல்பாடுகளை, மூளை செயல்திறன் உட்பட சீராக்குகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. குடலில் அழற்சி ஏற்பட்டால் மொத்த உடல் உள்செயல்பாட்டிலும் எதிர்மறை மாற்றங்கள் ஏற்படும்.

நீராகாரம் என்கிற பழைய சோற்று கஞ்சியில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் கோடிக்கணக்கில் உள்ளன. நொதிந்த - புளித்த சோற்றில், குடல் சுவர்களை பாதுகாக்கும் உயிர் வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன. மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற உயிர் வேதிப் பொருள் தன்னெதிர்ப்பு நோய்களை கட்டுக்குள் வைக்கும். இது குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் உள்ளன. சிந்தனையில் முற்போக்குவாதிகளாகவும், உணவு பழக்கத்தில் பாரம்பரியவாதிகளாகவும் இருப்பது, அடுத்த தலைமுறையை பாதுகாக்கும்.

டாக்டர் வி.பி.துரை,

துணை இயக்குனர், மருத்துவ பணிகள்,

கன்னியாகுமரி.

98657 95874

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us