PUBLISHED ON : நவ 26, 2014

2004 ஜனவரி மாதம். நாள் சரியாக ஞாபகம் இல்லை. மணிமாலாவை அவரது மகள் என்னிடம் அழைத்து வந்திருந்தார். மணிமாலாவுக்கு வயது 56 இருக்கும். அவரை 'இரும்பு மனுஷி' என்று கூட சொல்லலாம்.
'எந்த உணவு சாப்பிட்டாலும் ஜீரணமாகாமல், மலமாகவும், வாந்தியாகவும் வெளியேறிவிடுகிறது. ஏப்பம் தொடர்ந்து வருகிறது' என்பது அவருக்கிருந்த பிரச்னை. சில பரிசோதனைகள் செய்து பார்த்தேன். பரிசோதனையின் முடிவுகள், அவருக்கு உடலில் பிரச்னை இல்லை என்பதை தெளிவுபடுத்தியது. மனப்பிரச்னை காரணமாக, அவருக்கு 'குடல் ஒவ்வாமை' ஏற்பட்டிருந்தது வெளிச்சமானது. காரணம் கேட்டேன்.
'நான் தனியார் பள்ளி ஆசிரியை. நானும், எனது மகளும், அக்கம்பக்கத்தாரிடம் நன்றாகப் பழகுவோம். ஒருநாள் பக்கத்துவீட்டில் ஐந்து சவரன் நகை களவு போய்விட்டது. எங்களின் வறுமை, எங்கள் மேல் அவர்களை சந்தேகப்பட வைத்துவிட்டது. அவர்கள், போலீசில் புகார் தந்து விட்டனர். நாங்கள் மனதளவில் நொறுங்கி விட்டோம்' என்று கலங்கினார். மணிமாலாவின் பிரச்னை புரிந்தது. அவரை, மனநல மருத்துவரின் ஆலோசனைக்கு அனுப்பி வைத்தேன்.
உணர்ச்சி மிகுதியினால் உருவாகும் ஜீரண மண்டல நோய்தான் இந்த, 'உறுத்து குடல் அழற்சி' நோய். உடல் நோயாக இருந்தாலும், இந்நோய்க்கு அடிப்படை காரணம் மனதின் உணர்ச்சிப் போராட்டங்கள்தான்! இதனால் மலச்சிக்கலும், வயிற்றுப்போக்கும் மாறி மாறி ஏற்படும். அதிக அளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அறிகுறியாக வயிற்றுப்போக்கும், உணர்ச்சிகளை அடக்குவதன் அறிகுறியாக மலச்சிக்கலும் ஏற்படும்.
இந்த, 'உறுத்து குடல் அழற்சி' நோயின் முக்கிய அறிகுறி வயிற்றுவலி. அடிவயிற்றின் வலது அல்லது இடதுபக்கம் வலி பரவும். மலம் கழித்ததும் சற்றே வலி குறைவது போல் இருக்கும். சிறந்த மனநல ஆலோசனையே இந்நோய்க்கான சிகிச்சை என்றாலும், பிரச்னைகளின் அசுர கரங்களுக்குள் சிக்காமல், மனதை நம் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதே, இந்நோய் வராமல் தடுக்கும்.
எட்டு வருடங்களுக்குப் பின், இன்று மணிமாலாவைச் சந்தித்தேன். 'சந்தோஷமாக இருக்கிறேன் டாக்டர். எங்கள் மீதான அந்தப் புகார் பொய் என்று நிரூபணமாகிவிட்டது. இவன் என் பேரன். ஆசிர்வதியுங்கள்' என்றார். சந்தோஷமாக வாழ்த்தினேன். இனி, மணிமாலாவை இந்நோய் எப்போதும் தாக்காது. காரணம், அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
- டாக்டர் ரவி,
சிறுநீரகவியல் மருத்துவர்.

