PUBLISHED ON : மே 16, 2021

மியூகோ மைகிகோசிஸ் என்பது பூஞ்சை தொற்று. மூக்கு, வாய் பகுதியைப் முதலில் பாதிக்கும் இத்தொற்று, பாதித்த இடத்தில் உள்ள செல்களை அழித்து, அந்த இடம் கறுப்பாக மாறி விடும். மூக்கிலிருந்து வடியும் திரவமும் கறுப்பாக இருக்கும் எனவே, இதை கறுப்பு பூஞ்சை தொற்று என்போம்.
கண்களைச் சுற்றிலும், உள்ள எலும்புகளில், பல்வேறு விதமான காற்று இடைவெளிகள் இருக்கின்றன. இதற்கு சைனஸ் என்று பெயர். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், பூஞ்சை தொற்று பாதிக்கும்.
சர்க்கரை நோயாளிகள், கேன்சர் பாதிப்பு உள்ளவர்கள் உட்பட நீண்ட உடல் கோளாறுகள் உள்ளவர்களுக்கு இந்த பூஞ்சை தொற்று வரலாம்.. காரணம், தொடர்ந்து ஸ்டிராய்டு, இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
பதற்றம் ஏன்?
இந்தத் தொற்று வளரும் வேகம், காட்டுத் தீயைப் போன்றது. முதல் நாள் லேசாக இருக்கும் தொற்று, அடுத்த இரண்டு நாளில் வீரியமாகி, கிடு கிடுவென பரவிவிடும். பரிசோதனைக்கு ஒரு நாள் தாமதித்தால் ஆபத்து.
குஜராத், மகாராஷ்டிராவில் இந்த வைரஸ் தொற்றால், நிறைய பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நம் மாநிலத்தில் அந்த அளவுக்கு இதுவரை இல்லை. கொரோனா தொற்றுக்கு ஸ்டிராய்டு மருந்துகள் சாப்பிடுவதால், கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு, கண்களைச் சுற்றி வலி, கண் விழி சற்று வெளியில் வந்தது போன்ற தோற்றம், கண்களைச் சுற்றி வீக்கம், மூக்கில் இருந்து வடியும் திரவத்தின் நிறம் மாறுவது, நாக்கின் உள் பகுதியில் அன்னத்தில் கருப்பு திட்டு இருந்தால், மியூலோ மைக்ரோசிஸ் என்று உறுதி செய்தால், உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும்.
தாமதம் செய்தால், கண்களில் இருந்து மூளைக்கு செல்லும் பார்வை நரம்புகளில் அழுத்தம் கொடுத்து, பார்வையை இழக்க நேரிடும். மூக்கு, கண்கள் எல்லாம் மூளையுடன் தொடர்பு இருப்பதால், மூளையிலும் வேகமாக பரவ ஆரம்பித்து விடும்.
இரண்டு கண்களின் நரம்பும் இணைந்து மூளைக்கு செல்வதால், இரண்டு கண்களிலும் பார்வை இழப்பை ஏற்படுத்தும். இழந்த பார்வையை மீட்க முடியாது. மூளையிலும் பரவுவதால் உயிருக்கே ஆபத்தாக முடியும். பூஞ்சை தொற்றின் அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகம் வந்ததும் உடனே டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும்,
மூக்கிலிருந்து வரும் திரவத்தை பரிசோதனை செய்து, கருப்பு பூஞ்சை தொற்று உள்ளதா என்று உறுதி செய்யலாம். எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்தால், மூளையில் எவ்வளவு துாரம் பரவி உள்ளது என்று தெரிந்து விடும். அறுவை சிகிச்சை செய்து, பூஞ்சை முழுவதும் அகற்றி, பூஞ்சை தொற்றுக்கு எதிரான மருந்துகள் சாப்பிட வேண்டியிருக்கும்.
பூஞ்சைத் தொற்றால் பாதித்து, ஒரு முறை செயலிழந்த நரம்புகளை மீண்டும் செயல்பட வைக்க முடியாது. தொற்று வந்து விட்டால், உயிரை காப்பாற்றவே சிகிச்சை தரப்படுகிறது. பூஞ்சை தொற்று சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
டாக்டர் எஸ். சவுந்தரி,
தலைவர் - மருத்துவ சேவைகள்,
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை,
சென்னை.
9444 993103

