கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: பதப்படுத்துவது பாதுகாப்பானதா?
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: பதப்படுத்துவது பாதுகாப்பானதா?
PUBLISHED ON : ஆக 26, 2018

நீண்ட நாட்களாக போர் முனையில் இருக்கும் வீரர்கள், மாதக்கணக்கில் கப்பலில் பயணம் செய்வோருக்கு, உணவு தட்டுப்பாடு வந்து விடக் கூடாது என்பதற்காக, 18ம் நுாற்றாண்டில் அறிமுகம் ஆனது, காற்று புகாத பாட்டில்கள், டின்களில் அடைக்கப்பட்ட உணவு. நறுக்கிய, உரித்த பழங்கள், காய்கறிகள், மாமிசம் உட்பட தேவையான உணவு அனைத்தும், 'டின்'களில் அடைக்கப்படுகின்றன; இதில் சமைக்காத உணவுகளும் அடங்கும்.
கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதற்காக, உணவு அடைக்கப்பட்ட பாட்டில்கள், கேன்கள் சூடுபடுத்தப்படுகின்றன.
இவை, சில வாரங்கள் முதல் பல ஆண்டுகள் வரை, கெடாமல் இருக்கும் வகையில் பதப்படுத்தப்படுகின்றன.
பதப்படுத்தி, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளில், ஊட்டச்சத்து குறைவாக இருக்கும் என்பது, பொதுவான நம்பிக்கை. ஆனால், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளில் உள்ள புரதம், கார்போ ஹைட்ரேட், வைட்டமின்கள் - ஏ, டி, ஈ, கே போன்றவை கெடாமல், அப்படியே பாதுகாக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. டின்களை அதிக வெப்பத்தில், சூடுபடுத்தப்படுவதால், நீரில் கரையக் கூடிய வைட்டமின்களான, சி, பி இரண்டும் சிதைக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த இரண்டு வைட்டமின்களும் வெப்பம், காற்று இவற்றால், விரைவில் கரையும் தன்மை கொண்டவை என்பதால், சாதாரணமாக நாம் சமைத்தாலே சிதையும் வாய்ப்பு உள்ளது.
இந்த உணவை, வழக்கமான முறையில் வீட்டில் சேமித்து வைத்தாலும், இந்த நிலை தான் ஏற்படும்.பாதுகாப்பாக உள்ள ஊட்டச்சத்துக்களில் சில வகை, டின்களில் வைக்கும் போது, அதிகமாவதற்கும் வாய்ப்பு உள்ளது. உதாரணமாக தக்காளி, மக்காச்சோளம் போன்றவற்றை சூடுபடுத்தினால், அதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் அதிகரிக்கும்.
உணவை பதப்படுத்த பயன்படும் பாட்டில்கள், டின்களில், உணவை கெடாமல் வைக்க, வேதிப் பொருள் பூசப்படுகிறது. டின்களில் அடைக்கப்பட்ட, 78 உணவுப் பொருட்களை ஆய்வு செய்த போது, 90 சதவீதம் இந்த வேதிப் பொருள் கலந்திருப்பது உறுதியானது;
இதனால், இதயக் கோளாறுகள், ஆண் மலட்டுத் தன்மை, 'டைப் - 2' நீரிழிவு போன்றவற்றை ஏற்படுவதாக, சான்றுகள் கூறுகின்றன.
பாதுகாப்பாக அடைக்கப்படாத உணவுகளில், பக்கவாதத்தை ஏற்படுத்தக் கூடிய பாக்டீரியாக்கள் உள்ளன. பதப்படுத்தும் உணவில், நிறம், சுவை இவற்றை அதிகரிக்க, சர்க்கரை, உப்பு, சில வகை, 'பிரிசர்வேடிவ்கள்' சேர்க்கப்படுகின்றன.
பதப்படுத்தப்பட்ட உணவு பாக்கெட்டுகளை வாங்கும் போது, உப்பின் அளவு குறைவாக உள்ள அல்லது உப்பே இல்லாத உணவுகளை வாங்க வேண்டும்.
பழச்சாறு வாங்கினால், கூழாக வாங்காமல், தண்ணீர் கலந்து, நீர்க்க இருக்கும் ஜூசை தேர்வு செய்தால், சர்க்கரை குறைவாக இருக்கும்; உலர்ந்து, பொடியாக இருக்கும் பதப்படுத்திய உணவுகளில் சர்க்கரை குறைவு.
பழங்கள் கிடைக்காத போது, அவசரத் தேவைக்காக, பதப்படுத்திய பழச்சாறுகளை வாங்கலாமே தவிர, அதையே வழக்கமாக்குவது, ஆரோக்கியம் அல்ல!
எஸ்.அபிராமி,நியூட்ரிஷனிஸ்ட், சென்னை.
contact@sanonutrition.in
