தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொஞ்சம் கவனம்...கொட்டும் நிம்மதி!: இலை சிகிச்சை, பலன் தராது!

கொஞ்சம் கவனம்...கொட்டும் நிம்மதி!: இலை சிகிச்சை, பலன் தராது!

கொஞ்சம் கவனம்...கொட்டும் நிம்மதி!: இலை சிகிச்சை, பலன் தராது!


PUBLISHED ON : ஏப் 14, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 14, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோடைக் காலத்தில் பயன்படுத்தும் நீரில், கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்; கோடையில் பரவும் பல தொற்றுகள், நீர் வழியாகவே பரவுகிறது.

கல்லீரலை பாதிக்கும் வைரஸ்களான, ஹெப்பாடிடிஸ் ஏ முதல் ஜி வரை, ஏழு விதமான வைரஸ்களில், ஏ, இ இரண்டும், நீர் மூலம் பரவக் கூடியது. இதனால், மஞ்சள் காமாலை வரலாம்.

பசியின்மை, திடீரென்று பசி குறைவது, வலது பக்க வயிற்றில் வலி, பாரமாக உணர்வது, சிறுநீர் மஞ்சளாக இருப்பது, இதன் அறிகுறிகள். எந்த வகை ஹெப்பாடிடிஸ் வைரஸ் தாக்கினாலும், அறிகுறிகள் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஏ வைரஸ் பாதிப்பு, தானாகவே சரியாகக் கூடியது; எந்த மருந்தும் அவசியம் இல்லை.

ஆனால், அறிகுறிகள் தெரிந்தால், ரத்தப் பரிசோதனை செய்து, வைரசின் வகையை, உறுதி செய்து கொள்ள வேண்டும். பி, சி இரண்டும் அபாயமானவை; தொற்று பாதித்த ரத்தத்தை ஏற்றுவது, ஊசியை பயன்படுத்துவது, பாதுகாப்பற்ற தாம்பத்திய உறவு வழியாகப் பரவும்.

மஞ்சள் காமாலை வந்தால், கீழா நெல்லி சாப்பிடுவது, பல நேரங்களில், ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அதிலும், இ வைரஸ், கர்ப்பிணிகளை தாக்கும் போது, கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்; குழந்தையையும் பாதித்து விடும். இ வைரஸ் என்று உறுதியானால், தாமதிக்காமல், மருத்துவ ஆலோசனை தேவை.

கர்ப்பக் காலத்தில், புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் அதிகம் சுரக்கும். இது, கர்ப்பப்பை, குடல், பித்தப்பை போன்றவற்றின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதால், கர்ப்பக் காலத்தில், இளம் பெண்களுக்கு, பித்தப் பை கல் பிரச்னை வருகிறது. குழந்தை பிறந்த ஒரு மாதத்திற்கு பின், பித்தப் பையை அகற்றி விடலாம்.

பித்தப் பை கல்

பித்தப் பையில் கல் உருவாவது, பொதுவான பிரச்னை. சிலருக்கு, பித்த நீர் செல்லும் பாதையில், கல் அடைத்து இருக்கும்; இதனாலும் மஞ்சள் காமாலை வரும். குளிர் காய்ச்சல், தோலில் அரிப்பு ஏற்படுவது, இதன் பொதுவான அறிகுறிகள்.

இரவு உணவு சாப்பிட்டவுடன், வலது பக்கம், கல்லீரல் இருக்கும் இடத்தில், வலி வரும். கூடவே வியர்வை, வாந்தி இருக்கும். அறிகுறிகளை பார்த்து, மாரடைப்பு என, டாக்டர்கள், அதற்கான பரிசோதனை செய்வர். இதயத்தில், பிரச்னை இல்லை என்று தெரிந்த பின், ஸ்கேன், எடுத்துப் பார்ப்பர். கல் இருப்பது தெரியும்.

ஒரு சிலருக்கு, நெஞ்செரிச்சல், கொஞ்சம் சாப்பிட்டாலே, வயிறு கனமாக இருப்பது, வறுத்த, பொரித்த, உணவுகளை சாப்பிடும் போது, வயிறு உப்புவது போன்ற அறிகுறிகள் இருந்தாலும், பித்தப் பையில் கற்கள் இருக்கலாம்.

பித்தப் பை கல் பாதிப்பிற்கும், கீழா நெல்லி சிகிச்சை செய்கின்றனர். இதற்கும், கீழா நெல்லிக்கும், சம்பந்தமே இல்லை. இலை சிகிச்சையால் எந்த பலனும் கிடையாது. இரண்டு வாரங்கள் வரை, இலையை அரைத்து குடித்து விட்டு, நிலைமை மோசமாகி, வேறு வழி இல்லாமல், மருத்துவமனைக்கு வருகின்றனர்.

கல்லை அகற்றி விடுவதே நல்லது. எண்டோஸ்கோபி உதவியுடன், பித்தம் செல்லும் வழியில் இருக்கும் கல்லை எடுத்து விட்டு, ஒரு வாரம் கழித்து, இன்னொரு அறுவை சிகிச்சை செய்து, பித்தப் பையை அகற்றி விடுவர்.

எங்கள் மையத்தில், இரண்டையும் ஒரே நேரத்தில் செய்து விடுகிறோம். நாட்டிலேயே, ஓரிரு மருத்துவமனைகளில் மட்டுமே, இது போன்று செய்கின்றனர்.

பித்தப் பை செயல் படாமல் இருப்பதாலேயே, கல் உருவாகிறது. இதை எடுத்து விடுவதால், எந்த பாதிப்பும் வராது. மூன்று வயதில் துவங்கி, 90 வயது வரை, பித்தப்பை அகற்றும் சிகிச்சை செய்கிறோம்.

டாக்டர் பட்டா ராதாகிருஷ்ணா, குடல், இரைப்பை சிறப்பு மருத்துவர், சிம்ஸ், சென்னை. மொபைல்: 97909 24876

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us