PUBLISHED ON : ஏப் 14, 2019

உலகத்தில் கர்ப்பப்பை வாய் புற்று காரணமாக ஏழு நிமிடங்களுக்கு ஒரு பெண் உயிர் இழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 75,000 பெண்கள் இதனால் இறக்கின்றனர். 2025 க்குள் இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் இறப்பு விகிதமும் இரண்டு மடங்காகும் என்பது வருத்தமான விஷயம்.
இந்த புற்றுநோயை நிச்சயம் தவிர்க்க முடியும். கேன்சர் தடுப்பூசி, முறையான முன் பரிசோதனை மேற்கொண்டால் 2079 க்குள் இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்று நோயை முற்றிலும் ஒழித்து விட முடியும்.
இது நாள் வரை கர்ப்பப்பை வாய் புற்றுக்கான காரணமும் தடுப்பு முறையும் தெரியாமல் இருந்தது. HPV- HUMAN PAPILLOMA VIRUS என்ற வைரஸ் கிருமிதான் இதற்கு காரணம் என ஜெர்மன் விஞ்ஞானி ஹரால்டு ஹூர் ஹவுசென் கண்டுபிடித்து அதற்காக நோபல் பரிசும் வென்றார். எச்.பி.வி., வைரஸில் நுாறு வகைகள் உள்ளன. அதில் 6,11, 16,18,31,33,45,52,58 என்ற வகைகள் தான் கர்ப்பப்பை வாய் புற்றுக்கான காரணமானவை. எனவே இவைகளால் வரும் நோய்தொற்றை தடுத்து விட்டால் கேன்சர் வராமல் தடுத்து விடலாம.
இது நாள் வரை முன்கூட்டியே கண்டறியும் அதாவது பாப் ஸ்மியர் (pap smear) 'யாவிலி' என்ற பரிசோதனைகள் மூலம் கேன்சரின் முந்தைய நிலையிலேயே கண்டுபிடித்து வைத்தியம் செய்து கேன்சர் முற்றிய நிலைக்கு போகாமல் தடுக்கும் வழிமுறைகளை ஆரம்பித்தோம். அதையும் பாமர மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளாததால் இன்றும் கேன்சர் முற்றிய நிலையும் அதனால் ஏற்படும் மரணமும் எதிர்பார்த்தபடி குறையவில்லை. இப்பொழுது வரப்பிரசாதமாக கேன்சர் தடுப்பூசி வந்து விட்டது. இதை 9 லிருந்து 14 வயதிற்குள் 3 முறை போட்டுக் கொள்ள வேண்டும். பெண் குழந்தைகள் மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் போடலாம். இது முக்கியமாக உடலுறவினால் பரவுவதால் திருமணத்திற்கு முன்பே போடுவது தான் சரி. லேசான காய்ச்சல் உடம்பு வலி வரலாம். மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசி, முறையான முன் பரிசோதனை இவற்றை மேற்கொண்டால் கர்ப்பப்பை வாய் புற்று வரவே வராது என்கிற போது இன்னும் என்ன தயக்கம்? புற்று நோய் இல்லாத மகளிர் நலத்தை பேணுவோம்.
டாக்டர் ரேவதி ஜானகிராமன்
மதுரை. 94430 40355
