PUBLISHED ON : ஏப் 14, 2019

என்னுடைய சிறு குழந்தைக்கு மலச்சிக்கல் இருக்கிறது. இதற்கு எளிய வீட்டு மருத்துவம் என்ன?
குழந்தைகள் பெரும்பாலும் தண்ணீர் அதிகம் குடிப்பதில்லை. பிஸ்கட், பிரட் என வறட்சியை உண்டாக்கும் பொருட்களை உணவாக எடுப்பதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. பேயன் வாழைப்பழம் அல்லது மலைப்பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி அது மூழ்குமளவு விளக்கெண்ணெய் ஊற்றி வெள்ளை கற்கண்டை நன்கு பொடித்து அதில் துாவி லேசாக கிளறி ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நன்கு ஊற வைத்தால் இனிப்பான அல்வா போல மாறும். இதனை இரண்டு தேக்கரண்டி அளவு இரவு படுக்கும் போது குழந்தைக்கு கொடுத்து வர மலச்சிக்கல் சரியாகும்.
குழந்தை வாயில் புண் உள்ளது. உதடு, நாக்கு வெடித்து காணப்படுகிறது. இது ஏன்?
குழந்தைக்கு சளி இருந்தாலும், மூக்கில் சீல் அடைத்திருந்தாலும், வாய் வழியாக சுவாசிப்பதாலும், பால் சார்ந்த உணவுகளை உட்கொண்டு விட்டு வாய் கொப்பளிக்காமல் இருப்பதாலும் நாக்கில் வெண்ணிற மாவு படிந்து அதில் பூஞ்சை பாக்டீரியா கிருமிகள் வளர்ந்து துர்நாற்றமும் நாவில் வெடிப்பும், புண்களும் ஏற்படலாம். இதற்கு மாசிக்காய் நல்ல மருந்து. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இக்காயை சுட்டு சாம்பலாக்கி மூன்று முதல் நான்கு நாட்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு வேளை தேனுடன் சேர்த்து நாக்கில் தடவ புண்கள் ஆறும். ஒருவேளை புண்கள் தீவிரமாக இருந்தால் மாசிக்காய் சாம்பலை நெய்யுடன் குழப்பி குழந்தையின் நாக்கில் தடவி விழுங்கச் செய்யலாம்.
குழந்தை நடக்கும் போது விழுந்து விடுகிறது. பின் தானாகவே எழுந்து ஓடுகிறது. ஏதாவது நரம்புக் கோளாறு இருக்குமா?
சிறு குழந்தைகளுக்கு மின் ஆற்றலுடைய சில உப்புகளின் பற்றாக்குறையினால் இதுபோன்ற தசை பலவீனம் ஏற்படலாம். எலக்ட்ரால் என்ற உப்புக்கரைசல், பழச்சாறு வழங்கலாம். உலர்ந்த பழங்களான கருப்பு திராட்சை, அத்திப்பழம், பேரிச்சம்பழம், அல்பகோடா பழம் ஆகியவற்றை கொதிக்கும் நீரில் போட்டு நன்கு பிசைந்து சாறு எடுத்து அத்துடன் நாட்டுச் சர்க்கரை அல்லது கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி மூன்றில் ஒரு பங்கு தேன் கலந்து காலை மற்றும் மாலை ஒவ்வொரு தேக்கரண்டி கொடுத்தால் சத்துக்குறைபாட்டால் ஏற்படும் தசை பலவீனம் தீரும்.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்
சித்த மருத்துவ நிபுணர், 98421 67567
